தமிழ்த்தாய் தன் அருந்தவ புதல்வனை இழந்துவிட்டாள்! சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் உருக்கம்!
பட்டிமன்றப் பேச்சாளர் பேராசிரியர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழ்த்தாய் தன் அரும்பெரும் புதல்வனை இழந்துவிட்டாள் என மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
சிரித்த முகம், சிந்தையைக் கவரும் தமிழ் மற்றும் மதுரை மண்ணின் மணத்தால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் பேரன்பைப் பெற்ற பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரமும் அடைந்ததாகத் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தனது அரும்புதல்வர்களில் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், பாப்பையாவை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், மதுரை மக்களுக்கும், உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் பதிவு செய்துள்ளார்.
திருக்குறளுக்கு எளிய உரை கண்டவர், புறநானூற்றுக்குப் புதிய வரிசை அமைத்தவர், கம்பனின் காவியத்தை ஆய்ந்தறிந்தவர் எனப் பண்டைத் தமிழிலக்கியத்தில் சிறந்த விற்பன்னராகத் திகழ்ந்தவர் சாலமன் பாப்பையா என்று மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். அதே அளவுக்கு எளிய நடையில் நகைச்சுவை ததும்பப் பேசும் கலையைக் கையாண்டவர் என்றும், பொங்கல் மற்றும் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை தினங்கள் பாப்பையாவின் பட்டிமன்றத்தோடுதான் தொடங்கும் என்ற அளவுக்குத் தமிழர்களின் அன்றாட வாழ்வோடு இரண்டறக் கலந்த பெருமைக்குரியவர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், உலக நாடுகள் பலவற்றிலும் பல்லாயிரக்கணக்கான பட்டிமன்றங்களுக்கு நடுவராக இருந்து, தற்கால மதுரையின் அடையாளமாகவும், 'பாப்பையா பரம்பரை' எனப் போற்றப்படும் பேச்சாளர் பட்டாளத்தை உருவாக்கியவராகவும் திகழ்ந்தார் என்றார்.
இதையும் படிங்க: தமிழுக்கு பேரிழப்பு..! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்.!
மறைந்த தலைவர் கலைஞர் மீதும், தன் மீதும் எல்லையற்ற அன்பைப் பொழிந்தவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா என்று மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார். கழகம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் காட்டிய அன்பில் எந்த மாற்றமும் இருந்ததில்லை என்றும், புன்னகையோடு கரம் பற்றிக்கொள்ளும் வாஞ்சையான உறவைக் கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு மே மாதம் மதுரை சென்றிருந்தபோது, சில மாதங்களுக்கு முன்புதான் துணைவியாரை இழந்திருந்த பேராசிரியரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த தருணத்தை நினைவுகூர்ந்த அவர், பாப்பையாவின் இழப்பை மனம் ஏற்க மறுப்பதாகக் கூறித் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: மிசாவில் சித்ரவதையை அனுபவித்தவர் மு.க.ஸ்டாலின்! அந்த வரலாற்றை மறக்க முடியாது என திருமாவளவன் பேட்டி!