இதுதான் நீங்கள் செலுத்தும் 'தேர்தல் பில்'! வணிக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை சாடிய ராகுல் காந்தி!
வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதற்கு இந்த விலை உயர்வு பொதுமக்கள் மீது சுமத்தப்பட்ட 'தேர்தல் பில்' என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இந்தியாவின் பொருளாதாரச் சூழலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், வணிக எரிவாயு சிலிண்டர் (Commercial LPG) விலை இன்று வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெற்று வரும் சூழலில், எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ள இந்தத் திடீர் விலை உயர்வு சாமானிய மக்கள் மற்றும் சிறு வணிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (மே 1, 2026) முதல் அமலுக்கு வரும் வகையில், வணிகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை ஒரே நாளில் ரூ.990 உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றிலேயே ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய விலை உயர்வு இதுவே எனக் கருதப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் மத்திய அரசுக்கு எதிரான விமர்சனங்கள் எழத் தொடங்கின.
இந்த விவகாரம் குறித்துத் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசை மிகக்கடுமையாகச் சாடியுள்ளார். அவர் தனது பதிவில், பொதுமக்களே, இதுதான் நீங்கள் செலுத்தும் 'தேர்தல் பில்'. தேர்தல் காலம் என்பதால் இவ்வளவு காலம் அடக்கி வாசிக்கப்பட்ட விலையேற்றம், இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஏப்.29ம் தேதிக்கு பிறகு.. பெட்ரோல், டீசல் விலை தாறுமாறா உயரப்போகுது..!! ராகுல்காந்தி வார்னிங்..!!
மேலும் அவர் புள்ளிவிவரங்களுடன் விளக்குகையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் தற்போது வரை, அதாவது வெறும் 3 மாதங்களில் மட்டும் சிலிண்டர் விலை ரூ.1,380 அதிகரித்துள்ளது. இது ஏறத்தாழ 81 சதவீத உயர்வு ஆகும். சாமானியர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் வகையில் இந்த அரசு செயல்படுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விலை உயர்வு நேரடியாக உணவகங்கள், தேநீர் கடைகள், பேக்கரி உரிமையாளர்கள் மற்றும் சிறு தொழில் முனைவோரை நிலைகுலையச் செய்துள்ளது. ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள இவர்களுக்கு, சிலிண்டர் விலையில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் மாற்றம் பெரும் சுமையாக மாறியுள்ளது. வணிக சிலிண்டர் விலை உயரும்போது, அது மறைமுகமாக உணவுப் பொருட்களின் விலையையும் உயர்த்தும் என்பதால், நடுத்தர வர்க்க மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
பொதுவாகத் தேர்தல் காலங்களில் எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகள் உயர்த்தப்படாமல் இருப்பதும், வாக்குப்பதிவு முடிந்தவுடன் அல்லது தேர்தல் நெருங்கும்போது விலைகள் உயர்த்தப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ராகுல் காந்தியின் 'தேர்தல் பில்' என்ற விமர்சனம் இந்த யதார்த்தத்தையே பிரதிபலிக்கிறது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைக்காகக் காத்திருக்கும் வேளையில், இந்த விலையேற்றம் எதிர்க்கட்சிகளுக்குப் புதிய அரசியல் ஆயுதமாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: “ஆர்.எஸ்.எஸ், பாஜக சதிய முழுமையாக முறியடிப்போம்” ... பட்டியல் போட்டு பொளந்தெடுத்த ராகுல் காந்தி...!