×
 

சும்மா நேரத்தை வீணடிக்காதீங்க.. அம்பேத்கர் பேரன் தொடர்ந்த வழக்கில் ஹைகோர்ட் நீதிபதிகள் காட்டம்..!

வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிதள், இப்படிப்பட்ட மனுக்களை தாக்கல் செய்து வழக்கு தொடுப்பதின் மூலம், கோர்ட்டின் நேரம் வீணடிக்கப்படுவதாக கடிந்து கொண்டனர்.

மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் மஹாயுதி கூட்டணி அபார வெற்றிபெற்றது. இந்தக் கூட்டணியில் பாஜகவுடன் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸும் உள்ளன. இந்தக் கூட்டணி, 235 இடங்களில் மகத்தான வெற்றியைப் பெற்றது. தவிர, பாஜக 132 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

மகாயுதி கூட்டணியின் ஒரு பகுதியாக இருந்த சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் முறையே 57 மற்றும் 41 இடங்களைப் பெற்றன. இதைத் தொடர்ந்து முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸும், துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் பதவியில் உள்ளனர்.

ஆனால், இந்தத் தேர்தலில் மகா விகாஸ் அகாடி (MVA) கூட்டணிக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. காங்கிரஸ் வெறும் 16 இடங்களை மட்டுமே வென்றது. அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா (UBT) 20 இடங்களை வென்றது, அதே நேரத்தில் NCP (ஷரத் பவார் பிரிவு) 10 இடங்களை மட்டுமே பெற்றது. இதையடுத்து, இந்த தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அடிக்கடி குற்றஞ்சாட்டி வருகிறார்.

இதையும் படிங்க: மோடி போட்ட ஸ்கெட்ச்.. சசிதரூரை கொம்பு சீவிவிட்ட பாஜக.. ட்விட்டரில் முட்டுகொடுக்கும் கார்கே!

மகாராஷ்டிராவில் உள்ள பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை, ஒட்டுமொத்தமான வாக்காளர் எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளது என்றும், வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, சிவசேனா உத்தவ் தாக்கரே தலைமையிலான கட்சித் தலைவர்கள் என பலரும் குற்றச்சாட்டை முன் வைத்தனர். 

தேர்தல் நடைமுறைகள் அனைத்து வெளிப்படையானவை. அது குறித்து விளக்கம் அளிக்க தயார் என, தேர்தல் கமிஷன் பதில் அளித்தது. இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, வஞ்சித் பகுஜன் அகாதி கட்சி சார்பில் அம்பேத்கரின் பேரனும், மூத்த வழக்கறிஞருமான பிரகாஷ் அம்பேத்கர் மும்பை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

தேர்தல் நாளான 2024 நவம்பர் 20ம் தேதி மாலை 6 மணிக்கு மேல், மாநிலம் முழுதும் உள்ள ஓட்டுச் சாவடிகளில், 76 லட்சம் ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் 90 தொகுதிகளின் வெற்றி, தோல்வி மாறியுள்ளது. எனவே, மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என, பிரகாஷ் அம்பேத்கர் வாதாடினார். 

இதற்கு தேர்தல் கமிஷன் மற்றும் மத்திய அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 6 மணிக்கு முன் ஓட்டுச் சாவடிக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு, ஓட்டளிக்க அனுமதிப்பது வழக்கமான நடைமுறை தான். இது பல்வேறு தேர்தல்களிலும் கடைபிடிக்கப்பட்டுள்ளது என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 

இது தரப்பு வாதங்களை கேட்ட ஐகோர்ட், கடும் கேள்விகளை முன் வைத்தது. இதற்கு முன் 6 மணிக்கு மேல் ஓட்டுப்பதிவு நடந்ததே இல்லையா? இப்போது மட்டும் ஏன் புதிதாக கேள்வி எழுப்புகிறீர்கள். இந்த தேர்தலில் சந்தேகம் என்றால், இதற்கு முன் நடந்த லோக்சபா தேர்தல் நடைமுறை பற்றி சந்தேகம் எழுப்பாதது ஏன்? என, பிரகாஷ் அம்பேத்கர் தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

பின், இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிதள், இப்படிப்பட்ட மனுக்களை தாக்கல் செய்து வழக்கு தொடுப்பதின் மூலம், கோர்ட்டின் நேரம் வீணடிக்கப்படுவதாக கடிந்து கொண்டனர். இதனால், மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலை ரத்து செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடியானது.

இதையும் படிங்க: ஆங்கிலம் அவமானம் அல்ல.. அமித் ஷா பேச்சுக்கு ராகுல்காந்தி THUG கமெண்ட்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share