×
 

முகத்துல அழுக்கை வச்சுக்கிட்டு கண்ணாடியை கழுவாதீங்க.. ராகுல்காந்தியை வெளுத்த தேவேந்திர பட்னாவிஸ்..!

மகாராஷ்டிரா தேர்தல் குறித்து ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு தேர்தல் கமிஷன் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் விமர்சித்துள்ளார்.

கடந்த ஆண்டு நடந்த மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில், பாஜ - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. தோல்வியடைந்த காங்கிரஸ் மாபெரும் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டியது. வாக்காளர் பட்டியலில் உள்ள எண்ணிக்கைக்கும், பதிவான ஓட்டுகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருப்பதாக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார். 

இதையடுத்து, காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்தது. அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், தேர்தல் நடைமுறை, வாக்காளர் பட்டியல், பதிவான ஓட்டுகள் பற்றி தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், அதே குற்றச்சாட்டை பீகாரில் ராகுல் காந்தி மீண்டும் பதிவு செய்தார். 

மகாராஷ்டிரா தேர்தலில் நடந்தது போலவே, பீகார் தேர்தலிலும் முறைகேட்டை செயல்படுத்த பாஜ திட்டமிட்டுள்ளது. மகாராஷ்டிரா தேர்தலில், முதலில் தேர்தல் அதிகாரிகள் நியமனத்தில் முறைகேடு நடத்தினர். பின் வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்தனர். போலி வாக்காளர்களை பட்டியலில் சேர்த்தனர். ஓட்டுபதிவிலும் முறைகேடு நடந்தது. பின் அவர்களுக்கு சாதகமான தொகுதிகளில் கூடுதல் ஓட்டுப்பதிவை காண்பித்து பாஜக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது என, ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். 

இதையும் படிங்க: மோடியும், ராகுல்காந்தியும் ஒண்ணு தான்! I.N.D.I.A கூட்டணிக்கு கும்பிடி போட்டு நடையை கட்டிய ஆம் ஆத்மி!

ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுக்கு தேர்தல் கமிஷன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா தேர்தலில் முறைகேடு என காங்கிரஸ் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு 2024ம் ஆண்டே உரிய விளக்கம் அளிக்கப்பட்டது.

அது குறித்த விவரங்கள் அனைத்தும் தேர்தல் கமிஷன் வெப்சைட்டில் உள்ளது. அது மிகவும் வெளிப்படை தன்மையானது. தவறான தகவல்களை பரப்புவதின் மூலம் சட்டத்தை அவமதிப்பதோடு, தேர்தல் கமிஷனின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவிக்கப்படுகிறது.

தேர்தலில் தங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கவில்லை என்பதற்காக, தேர்தல் கமிஷனின் செயல்பாட்டை களங்கப்படுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது என தேர்தல் கமிஷன் கண்டனத்தை பதிவு செய்தது. இந்நிலையில், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ராகுல் காந்தியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார். 
பீகார் தேர்தலுக்கு முன்பே காங்கிரசின் தோல்வியை ராகுல் காந்தி ஒப்புக் கொண்டுவிட்டார்.  அவர் முதலில் துாக்கத்தில் இருந்து விழிக்க வேண்டும். களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும். 

கள நிலவரம், யதார்த்தம், மக்கள் மனநிலை இவற்றை பற்றி எதுவும் தெரியாமல், தொடர்ந்து பொய் பேசுவதால் மட்டுமே காங்கிரசுக்கு வெற்றி கிடைத்து விடாது. இன்னும் சொல்லப்போனால், அவர் தன்னை தானே ஏமாற்றிக் கொள்கிறார்.  சொன்ன பொய்யையே தொடர்நது கூறி வருகிறார்.

மகாராஷ்டிர தேர்தலில் முறைகேடு நடந்ததாக அவர் பேசியதன் மூலம், மகாராஷ்டிரா வாக்காளர்களை அவர் அவமதித்துள்ளார். அவர் தொடர்ந்து பொய் பேசி சொந்த கட்சி தொண்டர்களையே ஏமாற்றி வருகிறார். அவர் பொய் பேசுவதை முதலில்  நிறுத்த வேண்டும். 
தொடர்ந்து பொய் பேசுவதால், அவரது கட்சிக்குத்தான் பின்னடைவு வரும்..

ராகுல் காந்தி தன் முகத்தில் அழுக்கை சுமந்து கொண்டு, கண்ணாடியை துடைக்கும் செயலை செய்கிறார். இதை பல ஆண்டுகளாக அவர் செய்கிறார். இதன் மூலம் அவருக்கு எந்த பலனும் கிடைக்க போவதில்லை என 
பட்னவிஸ் கூறினார்.

இதையும் படிங்க: கருத்து சுதந்திரம்னா எதை வேணும்னாலும் பேசுவீங்களா? ராகுல்காந்திக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் நறுக் கேள்வி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share