பற்றி எரியும் மணிப்பூர்.. வெடிக்கும் போராட்டங்கள்; கட்டான இணைய சேவைகள்..!!
மணிப்பூரில் மீண்டும் வெடித்துள்ள போராட்டத்தால், அடுத்த 5 நாட்களுக்கு இணைய சேவை முடக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
2023, மே 3ம் தேதி மணிப்பூரில் இரு சமூக மக்களுக்கிடையே கலவரம் தொடங்கி சரியாக இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டது. பெரும்பான்மை மெய்தி இனத்தினருக்கும் சிறுபான்மை குக்கி பழங்குடி சமூகத்தினருக்கும் இடையே நடந்த மோதல் நாட்டையே உலுக்கியது. இந்த இரண்டு ஆண்டுகளாகவே மணிப்பூர் விஷயம் வதந்திகள் தொடங்கி மக்களவை விவாதம், அரசியல் தலைவர்களின் கள்ள மெளனம் என புகைந்துகொண்டேதான் இருந்தது.
இந்நிலையில் மணிப்பூரில் மெய்தி இன அமைப்பான அரம்பாய் தெங்கோல் (AT) தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக செய்தி பரவியதைத் தொடர்ந்து அங்குப் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்து நேற்று (ஜூன் 7ம் தேதி) இரவு தலைநகர் இம்பாலில் போராட்டங்கள் தீவிரமடைந்தன. இதைத்தொடர்ந்து தங்கள் தலைவரை விடுவிக்கக் கோரி குவாகிடெல் மற்றும் உரிபோக்கில் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சிலர் தீக்குளிக்கவும் முயன்றனர். சாலை மறியல், பிரதான சாலைகளில் டயர்களை வைத்து தீயிட்டுக் கொளுத்துவது, கோஷங்களைப் போடுவது என போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
இதையும் படிங்க: ராமதாஸ் வீடு முன்பு கட்சி நிர்வாகிகள் தர்ணா... பாமகவில் தொடரும் சலசலப்பு; என்னதான் நடக்குது?
இதனால் பலத்த பாதுகாப்பில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும், பாதுகாப்பில் இருக்கும் காவல் வாகனங்கள் மீதும் தாக்குதல் நடைபெறுவதால் பதற்றம் நிலவி வருகிறது. இந்தப் போராட்டங்களைக் கட்டுக்குள் கொண்டு வர பாதுகாப்பு படையினர் இறங்கியுள்ளனர்.
மணிப்பூரில் தற்போது குடியரசுத் தலைவரின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், கையை மீறிச்செல்லும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கட்டுப்படுத்த அடுத்த 5 நாட்களுக்கு இணைய சேவை முடக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது. அது மட்டுமல்லாது பிஷ்ணுபூர் மாவட்டத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்த அம்மாநில காவல்துறை விடுத்துள்ள அறிக்கையில், "மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை சமாளிக்க இணையதள மற்றும் மொபைல் டேட்டா, வி.எஸ்.ஏ.டி மற்றும் வி.பி.என் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இந்த தடை ஜூன் 7-ம் தேதி இரவு 11:45 மணி முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு அமலில் இருக்கும்.
சமூக ஊடகங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டு வெறுப்புணர்வை தூண்டும் கருத்துக்கள் பகிரப்படுகின்றன. இதனால் இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, தௌபால், காக்சிங் மற்றும் பிஷ்ணுபூர் மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் அபாயம் எழுந்திருக்கிறது. எனவே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
பிஷ்ணுபூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த உத்தரவை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். நிச்சயம் இந்த உத்தரவுகள் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சரி செய்யவே நாங்கள் இதை செய்திருக்கிறோம். எனவே முழு ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: மக்கள் விரோத திட்டங்களை கைவிடுங்கள்..! ஜூன் 2ல் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!