தவெகவுக்கு இடியை இறக்கிய கம்யூனிஸ்ட்கள்... இடைத்தேர்தலில் விஜய்க்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி...!
த.வெ.க.வுக்கு ஆதரவளிக்க கம்யூனிஸ்ட் கட்சியினர் மறுப்பு தெரிவித்ததாக தகவல் கிடைத்துள்ளது.
இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்கலாமா என்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பதில் நிர்வாகிகள் தயக்கம் காட்டுவதாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் தயக்கம் காட்டுவதற்கான காரணம் என்ன? இந்த ஆலோசனைக் கூட்டத்தில் என்னென்ன விஷயங்கள் பேசப்பட்டு வருகின்றன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்...
2026 சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத ஒரு சூழல் தமிழ்நாடு அரசியலில் ஏற்பட்டது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், தேர்தலுக்குப் பின்னர் நடைபெற்ற கூட்டணி பேச்சுவார்த்தைகளில் ஐஎம்எல், விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களுடைய ஆதரவை வழங்கியதைத் தொடர்ந்து, தற்போது தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பேற்றுள்ளது.
இதையும் படிங்க: இடைத்தேர்தலில் விஜய்க்கு புதிய சிக்கலா? த.வெ.க.வை ஆதரிக்க இந்திய கம்யூ. போட்ட கண்டிஷன்! சலசலப்பு!
அதேநேரத்தில், எந்தச் சூழ்நிலையிலும் நாங்கள் வெளியிலிருந்துதான் ஆதரவு அளிப்போம்; ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்க மாட்டோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தெளிவாகத் தெரிவித்திருந்தன. அந்த நிலைப்பாட்டில் இருந்து தற்போது வரை அவர்கள் மாறவில்லை என்றுதான் நாம் பார்க்கிறோம்.
ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும், தமிழக அரசின் அமைச்சர்களும் நேரில் சென்று பேசி, அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததாகவும், அந்தக் கோரிக்கையை கம்யூனிஸ்ட் கட்சியினர் முழுமையாக நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தங்களுடைய ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருவதால், இடைத்தேர்தலிலும் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து தனிப்பட்ட முறையில் எந்தக் கருத்தையும் தெரிவிக்க முடியாது என்றும், ஒட்டுமொத்த நிர்வாகக் குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தின் அடிப்படையில், பெரும்பான்மையான நிர்வாகிகள் எடுக்கும் முடிவின் அடிப்படையில்தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்களுடைய நிலைப்பாட்டைத் தெளிவாகக் கூறியுள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை முதலே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற்றுள்ளது. அந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வீரபாண்டியன் பங்கேற்று பேசியுள்ளார்.
இந்தக் கூட்டத்தைப் பொறுத்தவரையில், பெரும்பான்மையான நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என்ற கருத்தை முன்வைத்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே நம்முடைய ஆதரவுடன்தான் இந்த அரசு நடைபெற்று வந்தாலும், பிரச்சினைகளின் அடிப்படையில் மாநில நலனுக்காக மட்டுமே நாம் ஒன்றிணைந்து நிற்போம் என்று கூறியுள்ளோம். தற்போது கூட்டணி குறித்து நாம் பேச வேண்டிய தேவை இல்லை; கூட்டணி அமைக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று ஏற்கனவே தெரிவித்துவிட்டோம்.
இந்த நிலையில், தற்போது அரசியலில் ஒரு முக்கியமான காலகட்டம் நிலவி வருவதால், நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு நாம் ஆதரவு அளிக்கக் கூடாது என்பதுதான் கம்யூனிஸ்ட் கட்சியினரின் முக்கியமான காரணமாகக் கூறப்படுகிறது.
அதற்கு அவர்கள் முன்வைக்கும் முக்கிய காரணம், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் எதற்காக தங்களுடைய பதவியை ராஜினாமா செய்தார்கள் என்பதுதான்.
அவர்கள் உடனடியாக ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, மீண்டும் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களாக நிறுத்தப்படுகின்றனர். இதுபோன்ற சூழலில் அவர்களை ஆதரித்தால், ஒரு தவறான முன்னுதாரணத்திற்கு நாம் ஆதரவு அளித்ததாகப் பேசப்படும் என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் கருதுவதாகத் தெரிகிறது.
அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள இந்தச் சூழல் முழுக்க முழுக்க சுயநலமானதாக இருக்கிறது. எனவே, இந்தச் சூழலில் நாம் ஆதரவு அளித்தால், தமிழக வெற்றிக் கழகத்திற்கு எண்ணிக்கையின் அடிப்படையில் பெரும்பான்மை கிடைப்பதற்காகத்தான் இந்தச் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று பார்க்கப்படும் என்றும் நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மூன்றே மாதங்கள்தான் ஆகியுள்ளன. அந்த மூன்று மாதங்களுக்குள் தங்களைத் தேர்ந்தெடுத்த கட்சியை விட்டு ராஜினாமா செய்துவிட்டு, மற்றொரு கட்சியில் இணைந்து, மீண்டும் அதே தொகுதியில், அதே வேட்பாளராக, வேறு சின்னத்தில், வேறு கட்சி சார்பில் போட்டியிடுவது எந்த வகையில் நியாயம்?
இதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏன் ஆதரவு அளிக்க வேண்டும் என்ற கேள்வியையும் நிர்வாகிகள் எழுப்பியுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
ஒருவேளை 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்ததற்கான அடிப்படை காரணம், அவர்களுக்கு அதிகாரம் வழங்குவதற்காகவோ அல்லது அவர்களுடைய ஆட்சியில் பங்கு பெறுவதற்காகவோ, அமைச்சரவையில் இடம்பெறுவதற்காகவோ அல்ல.
மீண்டும் பாஜக ஆட்சி நேரடியாக வந்துவிடக்கூடாது; எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் ஏற்பட வேண்டும் என்ற அடிப்படையில்தான் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்தோம் என்பதுதான் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடாக இருந்தது.
ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள சூழல் அரசியல் சுயநலமானதாக இருப்பதால், இந்தச் சூழலில் நாம் ஏன் ஆதரவு அளிக்க வேண்டும் என்று பெரும்பான்மையான நிர்வாகிகள் கேள்வி எழுப்பி வருவதாகத் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, தற்போது பெரும்பான்மையான நிர்வாகிகள் எடுக்கும் முடிவின் அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் முடிவெடுக்குமானால், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்க மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், ஒருவேளை தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பார்களா, நேரடியாக அரசியல் களத்தில் போட்டியிடுவார்களா அல்லது தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணிப்பார்களா என்பது, செயற்குழுக் கூட்டம் முழுமையாக முடிவடைந்த பின்னரே தெரியவரும்.
இதையும் படிங்க: மீனவர்களுக்கு பேராபத்து.. புதிய தலைமைச் செயலகத்தால் பாதிப்பு..! CPI எதிர்ப்பு..!