அமைச்சர் மரிய வில்சன் வழக்கில் திடீர் ட்விஸ்ட்... நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு..!
சொத்து தகராறு பிரச்சனை தொடர்பான வழக்கில் ஆஜராகுவதிலிருந்து அமைச்சர் மரிய வில்சனுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, சமீபத்தில் நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள எண். மரிய வில்சன், 2022ஆம் ஆண்டு நடைபெற்ற தனது சகோதரர் குடும்பத்தினரை தாக்கிய வழக்கில் புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளார். இந்த உத்தரவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் 2022 ஆகஸ்ட் 8ஆம் தேதி புதுச்சேரி லாஸ்பேட்டை எழில் நகரில் நடைபெற்றது. அமைச்சர் மரிய வில்சனுக்கும் அவரது உடன்பிறப்பான மரிய குளோத்-க்கும் இடையே சொத்துப் பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. இந்தப் பிரச்சினையின் போது மரிய வில்சன் தனது தம்பி மரிய குளோத்தின் வீட்டுக்குள் புகுந்து, அவரையும் அவரது மனைவியையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தாக்குதலின்போது மரிய வில்சன் உருட்டுக்கட்டை பயன்படுத்தியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட கேர்லைன் கிளாட் லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் மேலும் சில பிரிவுகள் சேர்க்கப்பட்டன. அவற்றில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல், சேதம் விளைவித்தல், தன்னிச்சையாக காயப்படுத்துதல், ஆயுதத்தால் காயப்படுத்துதல், பெண்ணை மானபங்கப்படுத்தும் நோக்கத்துடன் தாக்குதல், குற்றவியல் மிரட்டல் மற்றும் அசிங்கமான வார்த்தைகள் பயன்படுத்தியது ஆகியவை அடங்கும்.
இதையும் படிங்க: 35 கோடி ரூபாய் பேரம் வழக்கில் அதிரடி... சிங்கப்பூர் லட்சுமண பெருமாளுக்கு லுக் அவுட் நோட்டீஸ்..!
புகாரில் வீடியோ ஆதாரங்கள் உள்ளதாகக் கூறப்பட்டது. பாதிக்கப்பட்டவர் மஹிளா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து மேலும் விசாரணைக்கு உத்தரவு பெற்றார். பின்னர் வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அமைச்சர் மரிய வில்சன் தொடர்ந்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், தமிழக அமைச்சர் மரிய வில்சன் கட்டாயமாக வரும் பத்தாம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்க வேண்டும் என்று புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டது. பட்ஜெட் விவகாரத்தை சுட்டிக் காட்டியதால் வரும் பத்தாம் தேதி ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினருடன் பேசி சமரசம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஓட்டுக்காக மாநில வளர்ச்சியை பலியிடலாமா.? சொல்லுங்க அமைச்சரே..! நயினார் சரமாரி கேள்வி..!!