புதிய அமைச்சர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து..! மனச புண்படுத்தாதீங்க... திமுகவினருக்கு அறிவுரை..!
புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள வன்னி அரசு மற்றும் ஷாஜகானுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் அரசியல் களம் தொடர்ந்து மாற்றங்களைச் சந்தித்து வரும் நிலையில், தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அரசில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளது முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கருத்து, திராவிட அரசியலின் பாரம்பரிய மதிப்புகளை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது.
வன்னி அரசு மற்றும் ஏ.எம். ஷாஜஹான் ஆகியோர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளதை வரவேற்று, அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த ஸ்டாலின், ஒவ்வொரு கட்சிக்கும் தனது அரசியல் முடிவுகளை எடுக்கும் உரிமை உண்டு என்பதை அடிப்படையாகக் கொண்டு, திமுக தொண்டர்கள் யாரையும் புண்படுத்தும் வகையில் கடுஞ்சொற்களைப் பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்தியுள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தவெக தலைமையில் உருவான அரசு, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில் விசிகவின் வன்னி அரசு சமூக நீதி, ஆதி திராவிடர் நலன் மற்றும் மலைவாழ் மக்கள் நலத் துறைக்கும், ஐயூஎம்எல்-ன் ஏ.எம். ஷாஜஹான் சிறுபான்மையினர் நல துறைக்கும் பொறுப்பேற்றுள்ளனர். இந்த இணைப்பு, தவெக அரசுக்கு வலு சேர்க்கும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. இதுவரை திமுகவுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்த இந்த இரு கட்சிகளும் தவெக அமைச்சரவையில் இணைந்தது, சில அரசியல் வட்டாரங்களில் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இதை “கூட்டணி துரோகம்” என்று சித்தரிக்க முயல்கின்றனர்.
இதையும் படிங்க: "ஒருநாளும் ஓயமாட்டோம்"..! கருணாநிதி பிறந்தநாள் வந்தாச்சு..! தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை..!
ஆனால் ஸ்டாலின் அவர்களின் அணுகுமுறை, இத்தகைய எதிர்மறைப் பேச்சுகளுக்கு இடம் கொடுக்காமல், அரசியல் முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது. அண்ணா - கலைஞர் வழியில் ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம்” என்பதை மறந்துவிடக்கூடாது என்றும் தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: நானாவே இருந்தாலும்... யாரையும் காப்பாத்த முயற்சிக்காதீங்க... 38 பேர் குழுவிற்கு ஸ்ட்ரிக்ட் உத்தரவு போட்ட ஸ்டாலின்...!