உங்க உழைப்பில் நம்பிக்கை இருக்கு... நிச்சயமா நம்ம ஆட்சிதான்..! முதல்வர் ஸ்டாலின் உறுதி..!!
நிச்சயமாக திராவிட மாடல் ஆட்சி அமையும் என முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சூழலில் திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், வெல்வோம் உடன்பிறப்புகளே உங்களின் உழைப்பால் என்று தெரிவித்தார்.
திராவிட மாடல் 2.0 ஆட்சியை உறுதி செய்திடும் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் நம்மை அழைக்கிறது என்றும் ஜனநாயக அறப்போர்க் களத்திற்குக் கொள்கை வீரர்களாகக் கழகத்தினர் அணிவகுக்கும் நேரம் இது எனவும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளே, மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தி, தேர்தல் பணிகளை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதை உங்களில் ஒருவனான நான், உங்களின் குரலாக எடுத்துச் சொன்னதாக தெரிவித்துள்ளார்
வெற்றி நிச்சயம் என்றும் அதற்கான இலக்கை அடைவதற்கு எவ்வித சமரசமுமின்றி இயக்கத்திற்காக உழைப்பது ஒன்றே இலட்சியம்., அந்த உறுதியுடன்தான் திராவிட முன்னேற்றக் கழகம் தனது தோழமைக் கட்சிகள் அடங்கிய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியுடன் 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தைச் சந்திக்கிறது. திராவிட மாடல் 2.0 அரசு அமைந்தே தீரும் எனவும் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: களமிறங்கிய ஸ்டாலின்.. திமுக சார்பில் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் 4வது நாளாக நேர்காணல்..!
ஒவ்வொரு தொகுதிவாரியாக நேர்காணல் செய்தபோது, ஒவ்வொருவரும் ஐந்தாண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளால் மக்கள் பெற்றுள்ள பலன்கள்தான், திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவதற்குக் காரணமாக இருக்கப்போகின்றன என்பதைச் சொல்லத் தவறவில்லை என்றும் கூறினார்.
சொன்னதைச் செய்யும் திராவிட முன்னேற்றக் கழக அரசு, சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றியிருக்கிறது என்றார். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் கிடைத்துள்ள பயன்களையும், அவர்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் இடைவிடாது பரப்புரை செய்யும் பணியை உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். 2026 தேர்தல் களத்தில் நிச்சயம் வெல்வோம் உடன்பிறப்புகளே உங்களின் அயராத உழைப்பின் மீதுள்ள நம்பிக்கையால் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையும் படிங்க: WAIT&SEE..! வில்லிவாக்கத்தில் செஞ்சி விட்ருவோம்... ஆதவ் அர்ஜுனாவுக்கு சேகர்பாபு எச்சரிக்கை..!!