நல்லக்கண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம்... முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு...!!
மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழ்நாட்டின் பொதுவுடமை இயக்கத்தின் முதுபெரும் தியாகி, விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு இன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். 101 வயதை எட்டியிருந்த அவர் கடந்த ஜனவரி முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சுமார் 24 நாட்களுக்கும் மேலாக மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பு மற்றும் சிகிச்சையில் இருந்து வந்தார்.
அவரது உடல் நிலை படிப்படியாக மோசமடைந்து, முக்கிய உறுப்புகள் செயலிழந்த நிலையில் பிற்பகல் 1.55 மணியளவில் அவர் இறுதியாக மருத்துவமனையில் காலமானார். நல்லகண்ணு அவர்களின் மறைவு செய்தி தமிழக அரசியல் வட்டாரங்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியது. அவரது வாழ்க்கை முழுவதும் சமூகநீதி, தீண்டாமை ஒழிப்பு, நிலச் சீர்திருத்தம், தொழிலாளர் உரிமைகள் போன்ற போராட்டங்களில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டவர் என்பதால், அவரை இழந்தது தமிழகத்திற்கும் தேசிய அளவிலும் பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லகண்ணு மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். நல்லகண்ணு ஒரு தியாகப் பெருஞ்சீலர் என்று அழைத்த அவர், அவருடன் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்ததை தனக்குப் பெருமையாகக் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழ்நாட்டின் உயரிய விருதான 'தகைசால் தமிழர்' விருதைப் பெற்ற பெருமைக்குரிய தலைவரான நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியாக அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வாய்க்கு வந்தபடி வடை சுடும் EPS... டப்பா என்ஜினை நம்பி அதிமுக..! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..!!
இந்த அறிவிப்பு தமிழக அரசின் சார்பில் அவரது பங்களிப்புகளுக்கு அளிக்கப்படும் உயரிய கௌரவமாகக் கருதப்படுகிறது. நல்லகண்ணு அவர்களின் உடல் அவரது விருப்பப்படி சென்னை மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்யப்பட்டுள்ளது. இதனால், அவரது உடல் அஞ்சலி நிகழ்ச்சிகளுக்குப் பிறகு மருத்துவக் கல்விக்காகப் பயன்படுத்தப்படும். இருப்பினும், அரசு மரியாதை அளிக்கும் நிகழ்வுகள் தியாகராய நகரில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாலை 5 மணி முதல் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் உடல் வைக்கப்படும் என்று கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முதல்வரின் கன்னியாகுமரி விசிட்... 6 மாஸ் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்..!!