மலிவு அரசியல் தவிடுபொடியானது! அண்ணா பல்கலை. வழக்கின் தீர்ப்பை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்...
ஐந்தே மாதத்தில் நீதி பெற்று தந்து மலிவு அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகளின் எண்ணத்தை தவிடுபொடி ஆக்கிவிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என நீதிபதி அதிரடி உத்தரவை பிறப்பித்தார். ஜூன் இரண்டாம் தேதி அவருக்கு வழங்கப்படும் தண்டனை விபரங்கள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வழக்கைத் துரிதமாக நடத்தி, ஐந்தே மாதத்தில் காவல்துறை நீதியைப் பெற்றுத் தந்துள்ளது என்றும் விசாரணை அதிகாரிகளுக்கும் அரசு வழக்கறிஞர்களுக்கும் மாண்பமை நீதிமன்றத்துக்கும் நன்றி எனவும் கூறியுள்ளார். காவல்துறையினரிடம் தான் தொடர்ந்து கூறுவது என்னவென்றால், குற்றம் நடக்கக் கூடாது; நடந்தால் எந்தக் குற்றவாளியும் தப்பக் கூடாது; விசாரணையைத் துரிதமாக நடத்தி, தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மக்கள் உயிர் உங்களுக்கு அவ்ளோ அலட்சியமா? நீங்க பொறுப்பேத்துப்பீங்களா? முதலமைச்சரை லெஃப்ட் & ரைட் வாங்கும் நயினார்..
குற்றங்களின் கூடாரமாக அன்று அரசை நடத்தி, இன்று அவதூறுகளை அள்ளித் தெளித்து, மலிவான அரசியல் செய்யத் துடித்த எதிர்க்கட்சியினரின் எண்ணத்தைத் தவிடுபொடியாக்கி உள்ளோம் எனக் கூறியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், சட்டநீதியையும் பெண்கள் பாதுகாப்பையும் எந்நாளும் உறுதிசெய்வோம் என உறுதிப்பட கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அண்ணாமலை பதவியிலிருந்து நீக்கம்.. பாஜகவுக்கு பெரிய இழப்பு.. பெங்களூரு புகழேந்தி சொல்லும் காரணங்கள்.!!