×
 

கேரளா அருகே கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்..! கரை ஒதுங்கிய சில கண்டெய்னர்கள்..!

கேரள அருகே அரபிக்கடலில் சாய்ந்த சரக்கு கப்பல் நேற்று முழுவதுமாக நீருக்குள் மூழ்கிய நிலையில் இன்று சில கண்டெய்னர்கள் கரை ஒதுங்கின.

கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து லைபீரியா நாட்டைச் சேர்ந்த MSC ELSA 3 என்ற சரக்குக் கப்பல் ஒன்று கொச்சி சென்று கொண்டிருந்த போது, திடீரென அந்த கப்பல் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. தென்மேற்கு பருவமழையின் காரணமாக கடலில் ஏற்பட்ட பாதகமான நிலைமையால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

நேற்று முன்தினம் புறப்பட்ட இந்தக் கப்பல் அன்று இரவே 10 மணிக்கு கொச்சி சென்றடையும் என்றும் அதை தொடர்ந்து தூத்துக்குடிக்கும் செல்ல திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தின் போது கப்பலில் 24 பேர் இருந்தனர். அவர்களில் ஒன்பது பேர் உயிர் காக்கும் உடைகளின் மூலம் தப்பித்த நிலையில், ஹெலிகாப்டர் மூலமும், மாற்று கப்பல் மூலமும் 12 பேர் மீட்கப்பட்டனர். சிறிது நேரத்திற்கு பிறகு மேலும் 3 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

இதையும் படிங்க: முழுவதுமாக கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்.. தொடர்ந்து கண்காணிக்கும் கடலோர காவல் படை..!

சரக்கு கப்பலில் பணியில் இருந்த அனைத்து ஊழியர்களும் காப்பாற்றப்பட்ட நிலையில், கப்பல் முழுவதுமாக நேற்று கடலில் மூழ்கியது. சரக்கு கப்பலில் இருந்த கண்டெய்னர்கள் மணிக்கு ஒரு கிலோ மீட்டர் வேகத்தில் கரைக்கு நகர்ந்து வருகிறது. கடந்த 12 மணி நேரத்தில் சரக்குக் கப்பலில் இருந்து எட்டு கண்டெய்னர்கள் கொல்லம் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல் கண்டெய்னர் அதிகாலை 4 மணிக்கு ஆலப்பாட் கடற்கரையிலும், அதைத் தொடர்ந்து மூன்று கண்டெய்னர் கொல்லத்தில் உள்ள நீண்டகரா கடற்கரையிலும் காணப்பட்டன. கடற்கரையை அடைந்த கண்டெய்னர்களில் எந்த அபாயகரமான பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கடலோர காவல்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் சரக்கு கப்பல் மூழ்கி இருக்கும் இடத்தை சுற்றி கடலோர காவல் படை, சிறிய விமான மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும், மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டும் வருகிறது.

விபத்துக்குள்ளான கப்பலில் இருந்த 640 கண்டெய்னர்களில், 13 கண்டெய்னர்களில் அதிக நச்சுத்தன்மை கொண்ட ரசாயனங்கள், 12 கண்டெய்னர்களில் கால்சியம் கார்பைடு வேதிப்பொருள், இது தவிர கப்பலில் 84 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 367 மெட்ரிக் டன் உலை எண்ணெய் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவை கரை ஒதுங்கும் சமயத்தில் அதன் அருகே மக்கள் யாரும் இருக்க வேண்டாம் என்றும் கடற்கரையில் அடையாளம் தெரியாத எந்த பொருளையும் தொட வேண்டாம் என்றும் பேரிடர் மேலாண்மை எச்சரித்துள்ளது. மேலும் ஏதேனும் அவசரம் என்றால் 112 என்ற அவசர உதவி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முழுவதுமாக கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்.. தொடர்ந்து கண்காணிக்கும் கடலோர காவல் படை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share