மும்பையில் விநாயகர் ஊர்வலத்தில் பயங்கரம்! 22 அடி சிலை சரிந்து 2 பேர் பலி! பெண் குழந்தைகள் உட்பட 5 பேர் காயம்!
இந்த விபத்தில் சங்கேத் நெவ்சே, 33, மற்றும் பிரிஜேஷ் ஹேமந்த் ஜோஷி, 30, ஆகிய இருவர் படுகாயமடைந்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மும்பையின் தெற்கு பகுதியில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தின்போது பிரம்மாண்ட விநாயகர் சிலை பக்தர்கள் கூட்டத்தின் மீது சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தெற்கு மும்பையின் பூலேஷ்வர் பகுதியில் பிரசித்தி பெற்ற ‘பூலேஷ்வராச்சா ராஜா’ விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. நேற்று இரவு சுமார் 10 மணியளவில் பலராம் மெர்ச்சன்ட் சாலையில் உள்ள கபூதர்கானா அருகே, ஜெய் அம்பே சௌக் பகுதியில் ஊர்வலம் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விபத்து ஏற்பட்டது.
சுமார் 22 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட விநாயகர் சிலை இரும்பு சட்டகத்தில் பொருத்தப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது அந்த சட்டகத்தில் இருந்த சில போல்ட்டுகள் மற்றும் நட்டுகள் தளர்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் சிலை திடீரென நிலைகுலைந்து, அருகில் இருந்த பக்தர்கள் கூட்டத்தின் மீது சரிந்து விழுந்தது.
இதையும் படிங்க: மும்பைக்கு அடுத்த பிரம்மாண்ட நகரம்! 124 கிராமங்களை இணைத்து உருவாகும் ‘மும்பை 3.0’ எங்கெல்லாம் மாற்றம்?
சிலை விழுந்ததும் அங்கு பெரும் அலறல் ஏற்பட்டது. கூட்டத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து அங்கும் இங்கும் ஓடினர். சிலையின் கீழ் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பொதுமக்களும் ஈடுபட்டனர்.
தகவல் கிடைத்ததும் மும்பை தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர், போக்குவரத்து போலீசார் மற்றும் ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் சங்கேத் நெவ்சே, 33, மற்றும் பிரிஜேஷ் ஹேமந்த் ஜோஷி, 30, ஆகிய இருவர் படுகாயமடைந்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும், வைபவ் கெனந்த், 38, பவன் சௌராசியா, 25, குணால் காஷித், 26, மற்றும் லாவண்யா, 5, திவ்யா, 7, ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக வி.பி. ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். சிலையை தாங்கிய இரும்பு சட்டகத்தின் தரம், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போல்ட்டுகள் தளர்ந்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மழையில் நனைந்தபடி போலீஸ் வேனை தடுத்து நிறுத்திய இளம்பெண்... வைரல் ரியாவின் முழு பின்னணி இதோ!