10 ஆண்டுகள் காணாத கனமழை! மும்பையை புரட்டிப்போட்ட வானிலை! தத்தளிக்கும் மக்கள்!
தென்மேற்கு பருவமழை வழக்கமாக துவங்குவதை விட, 13 நாட்கள் தாமதமாக மும்பையில் துவங்கியது. பருவமழையின் முதல் நாளே கொட்டித் தீர்த்த கனமழையால் முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.
மும்பையில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட சுமார் 13 நாட்கள் தாமதமாக தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே பெய்த அதி கனமழை நகர வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ரெட் அலர்ட் அறிவித்துள்ள நிலையில், மும்பை மற்றும் பால்கர் மாவட்டங்கள் வெள்ள அபாய சூழ்நிலையை எதிர்கொண்டு வருகின்றன.
நேற்றிரவு தொடங்கிய மழை இன்று காலை வரை இடைவிடாமல் நீடித்தது. பல பகுதிகளில் 300 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தெற்கு மும்பையில் மட்டும் 248 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது கடந்த பத்து ஆண்டுகளில் ஜூன் மாதத்தில் பதிவான மிக உயர்ந்த மழை அளவாகக் கருதப்படுகிறது.
கனமழையை தொடர்ந்து காலை 4 மணியளவில் இந்திய வானிலை ஆய்வு மையம் மும்பை மற்றும் பால்கர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவித்தது. இடி, மின்னல், அதி கனமழை மற்றும் மணிக்கு 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாளை 7 மாவட்டம்! நாளைமறுநாள் 12 மாவட்டம்! கொட்டித்தீர்க்க போகும் கனமழை! வானிலை எச்சரிக்கை!
தொடர்ந்து பெய்த மழையால் நகரின் பல பகுதிகளில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததால் சாலை போக்குவரத்து தடைபட்டுள்ளது.
மத்திய மற்றும் மேற்கு புறநகர் ரயில்கள் இணையும் முக்கிய நிலையமான தாதர் ரயில் நிலையம் வெள்ளநீரால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விக்ரோலி மேற்கு பகுதியில் ஒரு குடியிருப்பு கட்டடத்துக்கு அருகிலிருந்த தடுப்புச் சுவர் இடிந்து விழுந்த சம்பவமும் பதிவாகியுள்ளது.
தாதர் பகுதியில் கனமழையின் போது ஒரு மரம் கார் மீது விழுந்ததில் வாகனம் சேதமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ச்சியான மழை காரணமாக நகரின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மும்பையில் நிலவும் இந்த கடுமையான வானிலை அடுத்த சில நாட்களிலும் தொடரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் நகர நிர்வாகம் அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிங்க: கொட்டித்தீர்க்க காத்திருக்கும் மழை! வானிலை அப்டேட்! நாளை 3 மாவட்டம், ஜூன் 12ல் 8 மாவட்டங்கள்!!