செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாத ஜந்துக்கள்! விளாசிய நயினார் நாகேந்திரன்..!
தேர்தல் ஆணையத்தை விமர்சித்தவர்களை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக சாடினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் என பீகார் தேர்தலை குறிப்பிட்டு நயினார் நாகேந்திரன் பெருமிதம் தெரிவித்தார். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் அனைத்து சதித் திட்டங்களையும் பொய் பிரச்சாரங்களையும் தவிடுபொடியாக்கி, மகாத்மா புத்தர் ஞானம் பெற்ற பிஹார் மண்ணில் தொடர்ந்து இரண்டாவது முறையாக தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது என கூறினார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் டபுள் இன்ஜின் சர்காராக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசும், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான மாநில அரசும் வாரி வழங்கிய வளர்ச்சித் திட்டங்களைக் கண்டு மகிழ்ந்த பிஹார் மக்கள் இந்தத் தேர்தலின் போதும் மாபெரும் வெற்றியை நமக்குப் பரிசளித்திருப்பது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நேர்மைக்குக் கிடைத்த வெற்றி என்று தெரிவித்தார்.
தேர்தலில் வெற்றி பெற்றால் தேர்தல் ஆணையத்தைக் கொண்டாடுவதும், தேர்தலில் தோல்வியடையும் பொழுது அதே தேர்தல் ஆணையத்தைச் சாடுவதும்தான் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வாடிக்கையாகிவிட்டது என்று அவர் கூறியுள்ளார். ஆனால், எவ்வித குறுக்கு வழியையும் பயன்படுத்தாமல் மக்கள் சேவையில் மட்டுமே தங்களை முன்னிறுத்தி மக்களின் பேராதரவுடன் வெற்றிப் பாதையில் வீறு நடைபோடும் பாஜக எனும் பெரும் சக்தியின் அடுத்த பயணம் தமிழகத்தை நோக்கியே என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "நீரா" வாக்குறுதியும் கானல் நீரா? என்ன முதல்வரே... வெளுத்து வாங்கிய நயினார்...!
ஆடத் தெரியாதவன் தெரு கோணல் என்று சொல்லும் கதையாக, மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைக்க முடியாத அரைகுறைகள் தான் தேர்தல் ஆணையத்தின் நேர்மையைக் குறை சொல்வார்கள் என்றும் தேர்தல் ஆணையம் நடத்திய தேர்தலின் மூலம் கிடைத்த எம்பி மற்றும் எம்எல்ஏ உள்ளிட்ட பதவிகளில் அமர்ந்து கொண்டு அதே தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகக் கற்களை வீசும் ஆட்கள் செக்கிற்கும் சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாத ஜந்துக்கள் எனவும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதையும் படிங்க: பாஜக பற்றி சேகர்பாபு பேச வேண்டிய அவசியமல்ல... நயினார் நாகேந்திரன் காட்டம்...!