×
 

எரிசக்தி நெருக்கடியால் உலக நாடுகளின் பொருளாதாரம் கடும் பாதிப்பு..!! பிரதமர் மோடி வேதனை..!!

சூரத்தில் ரூ.274 கோடியில் மருந்து பூங்கா உள்ளிட்ட திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

குஜராத் மாநிலத்தின் முக்கிய தொழில் மற்றும் வர்த்தக மையமாக விளங்கும் சூரத் நகரில் ரூ.18,800 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது நாட்டின் பொருளாதார முன்னேற்றம், தன்னிறைவு இந்தியா திட்டம், எதிர்க்கட்சிகளின் செயல்பாடு மற்றும் உலகளாவிய சவால்கள் குறித்து அவர் விரிவாக கருத்து தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தல்களுக்கு பிறகு முதன்முறையாக சூரத் வந்துள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், குஜராத் மக்களும் குறிப்பாக சூரத் நகர மக்களும் தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவும் நம்பிக்கையும் வழங்கி வருவதாக தெரிவித்தார். இந்த ஆதரவு காலப்போக்கில் மேலும் வலுவடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் “ஆத்மநிர்பர் பாரத்” (தன்னிறைவு இந்தியா) திட்டத்தை சிலர் தொடர்ந்து விமர்சித்து வருவதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். இந்தியா தனது தேவைகளை தானே பூர்த்தி செய்யும் வல்லமையை பெற வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கம் என்றும், பிற நாடுகளை அதிகமாக சார்ந்திருக்கும் எந்த நாடும் அதன் முழுமையான வளர்ச்சி இலக்கை எட்ட முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: சூரத் அருகே 2 பேருந்துகள் மோதி பயங்கர தீ விபத்து! 7 பேர் உடல் கருகி பலி!

அதே நேரத்தில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி சந்தித்து வரும் தேர்தல் பின்னடைவுகளையும் பிரதமர் குறிப்பிட்டார். குஜராத் மக்கள் நீண்ட காலமாக காங்கிரஸை நிராகரித்துள்ளதாக கூறிய அவர், காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மாநிலங்களில்கூட மக்களிடையே அதிருப்தி அதிகரித்து வருவதாக தெரிவித்தார். சமீபத்தில் நடைபெற்ற இமாச்சலப் பிரதேச உள்ளாட்சித் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றும், இதன் மூலம் மக்கள் அந்த அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக தங்கள் கருத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல் முடிவுகளும் காங்கிரஸுக்கு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். அரசியல் லாபத்திற்காக குழப்பமான சூழ்நிலைகளை பயன்படுத்த முயலும் அணுகுமுறையை மக்கள் ஏற்கத் தயாராக இல்லை என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன என்றார். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் அரசின் செயல்பாடுகள் குறித்தும் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருவதாகவும், அதன் விளைவாக ஆட்சித் தலைமையில் மாற்றம் செய்ய வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உலகளவில் நிலவி வரும் பொருளாதார மற்றும் எரிசக்தி சவால்கள் குறித்தும் பிரதமர் கவலை வெளியிட்டார். கடந்த சில ஆண்டுகளில் கொரோனா தொற்று, பல்வேறு நாடுகளுக்கிடையேயான போர்கள் மற்றும் தற்போது உருவாகியுள்ள எரிசக்தி நெருக்கடி ஆகியவை உலக நாடுகளின் பொருளாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளன என்றார். இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் விலைகளில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன என்றும் குறிப்பிட்டார்.

இத்தகைய உலகளாவிய சவால்கள் மத்தியில் 140 கோடி இந்தியர்களின் ஒற்றுமை மற்றும் கூட்டு முயற்சியால் இந்தியா உறுதியுடன் முன்னேறி வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து பயணிக்கும் இந்தியா, உலக அரங்கில் மேலும் வலுவான நாடாக உருவெடுத்து வருவதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
 

இதையும் படிங்க: பொண்டாட்டி டார்ச்சர் தாங்கல சார்! என்னை கருணைக்கொலை பண்ணிடுங்க! கலெக்டரிடம் கதறிய கணவன்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share