வெளியானது நீட் தேர்வு முடிவுகள்.. யார் அதிக மதிப்பெண்கள்? மாணவர்களா அல்லது மாணவிகளா??
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் மாணவிகளே அதிகளவில் தேர்ச்சியை பெற்றுள்ளனர்.
இந்தியாவில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு தேசிய அளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். இந்த நீட் தேர்வுக்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் நீட் தேர்வை மத்திய அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த நிலையில் 2025-26 கல்வியாண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு மே 4 ஆம் தேதி நடைபெற்றது.
பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெற்றது. இத்தேர்வை நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். அதிலும் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். தற்போது நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மாணவர்கள் டாப் 100 இடங்களை பிடித்துள்ளனர்.
இதையும் படிங்க: நீட் முடிவுகள்... ஒருவர் கூட முழு மதிப்பெண் பெறாத நிலை... தமிழகம் பின்னடைவு!
அதில் சூர்யநாராயணன் என்ற மாணவர் தேசிய அளவில் 27வது இடமும், மாநில அளவில் முதலிடமும் பிடித்துள்ளார். இந்த தேர்வை 22.7 லட்சம் மாணவர்கள் எழுதிய நிலையில் அதில் 12.36 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமாக 5 லட்சத்து 14 ஆயிரத்து 63 மாணவர்களும், 7 லட்சத்து 22 ஆயிரத்து 462 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதேபோல் மூன்றாம் பாலினத்தவர்களில் 6 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் குமார் முதலிடம் பிடித்து அசத்தி உள்ளார். அதேபோல் மாணவிகளில் டெல்லியை சேர்ந்த அவிகா அகர்வால் முதலிடம் பிடித்திருக்கிறார். தேசிய அளவில் அவிகா அகர்வால் 5வது இடத்தை பிடித்துள்ளார்.
இதையும் படிங்க: நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை.. நீதிமன்ற உத்தரவால் ஆடிப்போன மாணவர்கள்..!