×
 

பல கிராமங்களை விழுங்கிய பெரு வெள்ளம்... கொத்து கொத்தாய் பறிபோன உயிர்கள்... ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை இவ்வளவா?

நேபாள நாட்டின் மலைப்பாங்கான ரசுவா மாவட்டத்தில் பெய்த கனமழையால் போட்டே கோஷி ஆற்றில் திடீரென காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது.

அண்டை நாடான நேபாளத்தின் போட்டே கோஷி ஆற்றில் திடீரென ஏற்பட்ட ராட்சத வெள்ளப்பெருக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இயற்கையின் கோரத் தாண்டவம் சில வினாடிகளில் மனித வாழ்க்கையை எப்படி தலைகீழாக மாற்றக்கூடும் என்பதற்கு நேபாளத்தில் அதிர்ச்சி தரும் காட்சிகளே சாட்சியாக உள்ளது. 

நேபாள நாட்டின் மலைப்பாங்கான ரசுவா மாவட்டத்தில் பெய்த கனமழையால் போட்டே கோஷி ஆற்றில் திடீரென காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது. எதிர்பாராத இந்தப் பெருவெள்ளத்தால் பல சிற்றூர்கள், சந்தைப் பகுதிகள் மற்றும் வணிக வளாகங்கள் முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டன.

பாறைகளும், சேரும் சகதியும் காட்டாற்று வெள்ளத்தில் கரைபுரண்டு வந்தபோது, உயிருக்கு பயந்து மனிதர்கள் அலறியடித்து ஓடும் சிசிடிவி கேமரா காட்சிகள் நெஞ்சை நடுங்க வைக்கின்றன.

இதையும் படிங்க: நோபாளம் வெள்ளத்தில் சிக்கிய மயிலாடுதுறையைச் சேர்ந்தவர்களின் நிலை என்ன? - உறவினர்கள் கொடுத்த முக்கிய தகவல்...!

போட்டே கோஷி ஆற்றில் சீறிப்பாய்ந்த வெள்ளம் வீடுகளையும், பாலங்களையும், சாலைகளையும் சுவடே தெரியாமல் அடித்துச் சென்றது. நுவாக்கோட் மற்றும் ரசுவா பகுதிகள் சேற்றுக்கு அடியில் புதைந்து போய்விட்டன.

நேபாளம் - சீன எல்லையை இணைக்கும் மலைப்பகுதியில் வழக்கம் போல் இயங்கிக் கொண்டிருந்த மனிதர்களின் அன்றாட வாழ்க்கை, திடீரென ஏற்பட்ட நிலச்சரிவாலும் பயங்கர வெள்ளத்தாலும் ஒரே நொடியில் சின்னாபின்னமாகியுள்ளது.

இந்தக் கோர வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இதனிடையே, நேபாளத்தின் கோடாரி பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இதனால் திபெத் பகுதியில் உள்ள பனிப்பாறை ஏரி ஒன்றின் அணை உடைந்து, பெருமளவிலான நீர் ஒரே நேரத்தில் சீறிப்பாய்ந்து வந்ததே கோஷி ஆற்றில் பெருவெள்ளம் ஏற்படக் காரணம் என நேபாள வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தங்கள் உறவுகளின் கதி என்னவென்று தெரியாமல் தவிக்கும் குடும்பங்களின் கண்ணீரும், கதறல் குரலும் அப்பகுதியையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் , நேபாளத்தில் போட்டே கோஷி ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் குறைந்தது 157 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

இதையும் படிங்க: நோபாளம் வெள்ளத்தில் சிக்கிய மயிலாடுதுறையைச் சேர்ந்தவர்களின் நிலை என்ன? - உறவினர்கள் கொடுத்த முக்கிய தகவல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share