நேபாளத்தை புரட்டிப்போட்ட பெருவெள்ளம்! இந்தியாவுக்கும் காத்திருக்கும் அடுத்த ஆபத்து! பீகார், உ.பி.க்கு எச்சரிக்கை!
எல்லைப் பகுதியில் இன்னும் பாறை அடைப்புகள் இருப்பதாக கூறப்படுவதால் மீண்டும் வெள்ளம் ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் போதே கோஷி நதியில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் 160-க்கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கியுள்ள நிலையில், இந்த பேரழிவு எவ்வாறு உருவானது என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இதேபோன்ற இயற்கை அணை உடைப்பு மீண்டும் ஏற்பட்டால் இந்தியாவின் பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரசுவா, தாடிங், நுவாகோட் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. 400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களில் இந்தியாவில் இருந்து கைலாஷ் மானசரோவர் பயணம் மேற்கொண்டவர்களும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீடுகள், சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன.
இதற்கிடையே, இந்தியா சார்பில் விமானப்படை மூலம் கூடாரங்கள், கம்பளிகள், சோலார் விளக்குகள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் உள்ளிட்ட 10 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியும் நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவை தொடர்புகொண்டு இந்தியாவின் முழுமையான ஆதரவை உறுதி செய்துள்ளார்.
இதையும் படிங்க: நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள் நிலை என்ன? சட்டசபையில் அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட முக்கிய தகவல்!
இந்த பெருவெள்ளத்துக்கு முதலில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக இருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால், இமயமலை ஆய்வில் ஈடுபடும் நிபுணர்களின் முதற்கட்ட ஆய்வில் வேறொரு காரணம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
திபெத் பகுதியில் பனி மற்றும் பாறைகள் சரிந்து லெண்டே கோலா நதியின் நீரோட்டத்தை அடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் நதியில் நீர் அதிகளவில் தேங்கி, இயற்கை அணை போன்ற நிலை உருவானது.
பின்னர் அந்த அடைப்பு உடைந்ததால், தேங்கியிருந்த நீர் ஒரே நேரத்தில் கீழ்நோக்கி பாய்ந்தது. நேபாளத்துக்குள் நுழைந்ததும் லெண்டே கோலா நதி போதே கோஷி என அழைக்கப்படுகிறது. இதுவே திடீர் வெள்ளத்துக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
நிலநடுக்கம் பதிவாகியிருந்தாலும், அதற்கும் பனிப்பாறை சரிவுக்கும் நேரடி தொடர்பு இருப்பது உறுதி செய்யப்படவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், எல்லைப் பகுதியில் இன்னும் பாறை அடைப்புகள் இருப்பதாக கூறப்படுவதால் மீண்டும் வெள்ளம் ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் இந்தியாவின் பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் உணரப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் காலநிலை மாற்றமும் முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. இமயமலையில் பனிப்பாறைகள் மற்றும் பெர்மாஃப்ராஸ்ட் எனப்படும் நீண்டகால உறைந்த மண்-பனி அடுக்குகள் வெப்பமயமாதலால் பாதிக்கப்படும்போது, மலைப்பகுதிகளில் பாறை மற்றும் பனிச்சரிவு அபாயம் அதிகரிக்கலாம்.
நேபாளத்தில் நடக்கும் இத்தகைய மாற்றங்கள் அந்நாட்டுடன் மட்டும் முடிவதில்லை. போதே கோஷி உள்ளிட்ட நதிகள் இந்தியாவின் கங்கை நதி அமைப்புடன் இணைவதால், இமயமலைப் பகுதிகளில் ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்ள இந்தியா, நேபாளம், சீனா ஆகிய நாடுகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு எதிர்காலத்தில் முக்கியத்துவம் பெறும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க: நேபாளம், சீனாவில் கொடூர வெள்ளம்... பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டெரெஸ் இரங்கல்!