Gpay பயன்படுத்துறீங்களா! இனி பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்க முடிவு: முழுவிவரம் இதோ
இந்தியாவில் பலராலும் பயன்படுத்தப்பட்டு வரும் டிஜிட்டல் பேமெண்ட் பிளாட்ஃபார்மான கூகுள்பே எனப்படும் ஜிபே, இனிமேல் குறிப்பிட்ட சில பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது.
இந்த கட்டணம் பரிவர்த்தனை மதிப்புக்கு ஏற்ப 0.5 சதவீதத்தில் இருந்து 1 சதவீதம் வரையிலும், கூடுதலாக ஜிஎஸ்டி சேர்த்தும் பயன்படுத்துவோரிடம் இருந்து வசூலிக்கும். குறிப்பாக கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் தொலைப்பேசிக் கட்டணம், இன்டர்நெட் பில், குடிநீர் வரி உள்ளிட்டவை, கடைகளில் பொருட்கள் வாங்குதல் ஆகியவற்றுக்கு அதன் பில் தொகையைப் பொருத்து கட்டணத்தை வசூலிக்க இருக்கிறது. ஃபோன்பே(Phonepe), பேடிஎம் ஆகியவே இதேபோன்று வாடிக்கையாளர்களிடம் குறைந்த அளவு கட்டணம் வசூலித்து வரும் நிலையில் அதே முறையை கூகுள்பே செயலையும் செய்ய இருக்கிறது.
ஏற்கெனவே மொபைல் ரீசார்ஜ் செய்ய ரூ.3 கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஜிபே ஏற்கெனவே ஓர் ஆண்டுக்கு முன்பே அறிவிப்பு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. தி எக்னாமிக் டைம்ஸ் நாளேடு வெளியிட்ட செய்தியில் “ டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் ஜிபேயில் மின் கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்தினால் பயனீட்டாளர்கள் ரூ.15 மற்றும் ஜிஎஸ்டி சேர்த்து ஜிபே வசூலிக்கும். ஜிபே மூலம் செலுத்தப்படும் பணத்தை உரியவரிடம் ஒப்படைக்க செய்யப்படும் பணிகளுக்கு வழங்கவே இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது, மேலும், அடுத்த கட்டத்துக்கு ஜிபே தனது இயக்கத்தை நகர்த்த இருப்பதால் அதற்கான பணத்தேவைக்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பற்றி எரியும் முன்மொழி கொள்கை விவகாரம்.. ஆங்கிலத்தில் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்திய ராகுல்..!
கூகுள்பே இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ வங்கி டெபிட் கார்டு கிரெடிட் கார்டுகளை ஜிபே மூலம் இணைத்து அதிலிருந்து மின் கட்டணம், குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்தும்போதுதான் கட்டணம் வசூலிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது. இதன்படி குடிநீர் கட்டணம், மின்கட்டணம், சமையல் எரிவாயு சிலிண்டர் கட்டணம் ஆகியவற்றுக்கு டெபிட், கிரெடிட் கார்டு மூலம் பில் செலுத்தினால் போன்பே நிறுவனம் ரூ.40 வரை கட்டணம் வசூலிக்கிறது.
மத்திய அரசின் உத்தரவுப்படி 2021ம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், பரிவர்த்தனை ரூ.2 ஆயிரத்துக்கு அதிகமாக இருந்தால் 1.1 சதவீதம் கடைக்காரருக்கு கட்டணமாக வழங்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. யுபிஐ பரிவர்த்தனையில் 37 சதவீத சந்தையை கூகுள் பே கையகப்படுத்தியுள்ளது. வால்மார்ட் ஆதரவில் இயங்கும் போன்பேவுக்கு அடுத்தார்போல் ஜிபே பரிவர்த்தனையில் 2வது இடத்தில் இருக்கிறது. ஜனவரி மாதத்தில் மட்டும் ஜிபே மூலம் ரூ.8.26 லட்சம் கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சல்லி சல்லியா நொறுங்கிய அண்ணாமலை இமேஜ்... தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் தெறிக்கவிடும் போஸ்டர்கள்..!