×
 

நிலநடுக்கத்தால் குலுங்கிய நியூசிலாந்து..!! ரிக்டர் அளவு 6.3-ஆக பதிவு..!! சுனாமி எச்சரிக்கை..!!

நிலநடுக்கம் ஏற்பட்ட நேரத்தில் அப்பகுதியில் பலர் இருந்ததால் பதற்றம் அதிகரித்தது.

நியூசிலாந்தின் தெற்கு தீவில் உள்ள டி அனாவ் (Te Anau) நகருக்கு அருகில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்து தேசிய எமர்ஜென்சி மேலாண்மை மையம் (NEMA) இதன் மையப்பகுதி டி அனாவிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் வடக்கே இருந்ததாகவும், ஆழம் 51 கிலோமீட்டர் என்றும் தெரிவித்துள்ளது. 

இந்த திடீர் அதிர்வால் உள்ளூர் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் பெரும் பீதியில் ஆழ்ந்தனர். கட்டிடங்கள் குலுங்கியதால் பலர் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். டி அனாவ் நகரம், உலகப் புகழ்பெற்ற ஃபியோர்ட்லாந்த் (Fiordland) தேசிய பூங்காவுக்கான முக்கிய நுழைவாயிலாக விளங்குகிறது. அங்கு அழகிய ஃபியோர்டுகள், மலைகள் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளை காண ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தினசரி வருகை தரும் இடம் இது. நிலநடுக்கம் ஏற்பட்ட நேரத்தில் அப்பகுதியில் பலர் இருந்ததால் பதற்றம் அதிகரித்தது. 

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, தெற்கு தீவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளுக்கு – குறிப்பாக மில்ஃபோர்ட் சவுண்ட் முதல் புய்செகர் பாயிண்ட் வரை - சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மக்கள் உடனடியாக உயரமான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். பின்னர் எச்சரிக்கை தளர்த்தப்பட்டு, “சுனாமி செயல்பாடு ஆலோசனை”யாக மாற்றப்பட்டது. கடலோரப் பகுதிகளில் வலுவான மற்றும் எதிர்பாராத அலைகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை தொடர்கிறது.

இதையும் படிங்க: வணிகங்கள் செழிக்கும், புத்தாக்கம் வளரும்! நியூசிலாந்து வர்த்தக மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்!

உலகின் “ரிங் ஆஃப் ஃபயர்” (Ring of Fire) பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து, நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலைச் செயல்பாடுகளுக்கு பெயர் பெற்றது. இங்கு அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படுவது வழக்கம். இருப்பினும், 6 ரிக்டருக்கு மேல் பதிவாகும் நிலநடுக்கங்கள் கவலையை ஏற்படுத்துகின்றன. அமெரிக்க மற்றும் ஜெர்மன் ஆய்வு மையங்கள் இந்த நிலநடுக்கத்தை 5.9 ரிக்டராக மதிப்பிட்டுள்ளன.

இதுவரை பெரிய சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. ஆனாலும், அதிகாரிகள் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். நிலநடுக்கம் என்பது எப்போது, எங்கு ஏற்படும் என முன்கூட்டியே கணிக்க முடியாத ஒன்று. சில நிமிடங்களில் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் திறன் கொண்டது. சமீபத்தில் வெனிசுவேலாவில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கம் இதற்கு சாட்சியாகும்.

நியூசிலாந்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் உள்ளூர் வழிகாட்டுதல்களை கண்டிப்பாகப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இயற்கைப் பேரிடர்களுக்கு எதிரான தயார்நிலை முக்கியம் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது.

இதையும் படிங்க: வெனிசுலாவை உலுக்கிய பேரழிவு! பலி 4,333 ஆக உயர்வு.. ஆயிரக்கணக்கானோர் மாயம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share