இந்தியாவுக்கு எதிராக சதிதிட்டம்? காஷ்மீரில் ரெய்டு! அதிரடியில் இறங்கிய NIA அதிகாரிகள்!
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பல இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்புகளுக்கு எதிராக தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) ஜம்மு காஷ்மீரில் பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தியுள்ளது.
குறிப்பாக, ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இடங்களில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஸ்ரீநகரில் உள்ள லால் பஜார், ஜம்மு மற்றும் தெற்கு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
2024 பிப்ரவரியில் மத்திய அரசு ஜமாத்-இ-இஸ்லாமியை சட்டவிரோத அமைப்பாக அறிவித்து, உபா சட்டத்தின் கீழ் அதன் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்தது. இந்த அமைப்பு பயங்கரவாத நடவடிக்கைகள், பிரிவினைவாதம் மற்றும் இந்திய எதிர்ப்புப் பிரசாரத்தில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல்: என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகை தாக்கல்..!! பாகிஸ்தான் தொடர்பு உறுதி..!!
என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தபடி, ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பை மீண்டும் செயல்படுத்தி, பிரிவினைவாத நடவடிக்கைகளை முன்னெடுக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பு நீண்டகாலமாக காஷ்மீரில் சர்ச்சைக்குரிய அமைப்பாகக் கருதப்படுகிறது. பல சம்பவங்களில் இந்த அமைப்பு பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதாக மத்திய அரசு குற்றஞ்சாட்டி வருகிறது. தடை நீட்டிக்கப்பட்ட பிறகும் சில தீவிரவாத சக்திகள் இந்த அமைப்பை மறைமுகமாகப் பயன்படுத்த முயற்சிப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சோதனைகளின் போது பல ஆவணங்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் பிற ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து என்ஐஏ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளை முழுமையாக ஒழிக்க மத்திய அரசு உறுதியாக உள்ளது. என்ஐஏவின் இந்த நடவடிக்கை பிரிவினைவாத சக்திகளுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல சோதனைகள் மற்றும் கைது நடவடிக்கைகள் விரைவில் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் ஒன்றரை கிலோ தங்கம் கொள்ளை...! 5 பேரை தட்டி தூக்கிய போலீஸ்..! தீவிர விசாரணை..!