இந்திய வங்கிக்கு ரூ.100 கோடி தர வேண்டும்!! வாங்கிய பணத்தை தராமல் இழுத்தடித்த நீரவ் மோடி! லண்டன் கோர்ட் உத்தரவு!
இந்திய வங்கியிடம் வாங்கிய கடனை, அதற்கான வட்டியுடன் சேர்த்து ரூ.100 கோடி செலுத்த பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ள நகை வியாபாரி நீரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய வங்கியிடம் பெற்ற கடனை வட்டியுடன் சேர்த்து சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமான தொகையை செலுத்த வேண்டும் என பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ள நகை வியாபாரி நீரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு, நீரவ் மோடி தொடர்பான பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் மீண்டும் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீரவ் மோடி, கடந்த 2012 ஆம் ஆண்டு துபாயில் இயங்கிய தனது “ஃபயர்ஸ்டார் டைமண்ட் எப்இசட்இ” நிறுவனத்தின் பெயரில் இந்திய வங்கியிடமிருந்து சுமார் ரூ.38.9 கோடி கடன் பெற்றிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தக் கடன் திருப்பிச் செலுத்தப்படாதால் தனிப்பட்ட முறையில் தானே செலுத்துவதாகவும் அவர் உத்தரவாத பத்திரத்தில் கையெழுத்திட்டிருந்தார்.
பின்னர் 2018 ஆம் ஆண்டு பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, அந்தக் கடனை திரும்பப் பெற வங்கி நடவடிக்கை எடுத்தது. ஆனால் நிறுவனம் அல்லது நீரவ் மோடி தரப்பில் பணம் செலுத்தப்படாததால், அந்த தனிப்பட்ட உத்தரவாதத்தை அமல்படுத்தக் கோரி லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதையும் படிங்க: வடகிழக்கு இந்தியா முன்னேற்றத்திற்கான நுழைவு வாயில்! பிரதமர் மோடி பெருமிதம்! ரூ.47,600 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல்!
விசாரணையின் போது, தாம் இந்தியாவில் இல்லாததால் வங்கி அனுப்பிய நோட்டீஸ்கள் கிடைக்கவில்லை என நீரவ் மோடி தரப்பு வாதிட்டது. ஆனால், அந்த அறிவிப்புகள் அவர் அடைக்கப்பட்டுள்ள லண்டன் சிறைக்கும், அவரது சட்ட குழுவிற்கும் அனுப்பப்பட்டிருந்தது என நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. இதனை அடிப்படையாக கொண்டு அவரது வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது.
மேலும், நீரவ் மோடியிடம் இந்தக் கடன் விவகாரத்தில் செல்லுபடியாகும் சட்ட ரீதியான பாதுகாப்பு வாதங்கள் எதுவும் இல்லை எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து, அசல் கடன் தொகை ரூ.38.9 கோடி மற்றும் அதற்கான வட்டி சேர்த்து சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமான தொகையை இந்திய வங்கிக்கு செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு, நீரவ் மோடி உள்ளிட்ட பொருளாதார குற்றவாளிகள் வெளிநாடுகளில் இருந்தாலும் சட்ட நடவடிக்கைகள் தொடரும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்திய வங்கி மோசடி வழக்குகளில் சர்வதேச அளவிலான ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறக்கூடும் எனவும் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 32 வீடு! 2 பண்ணை வீடு! ஏராளமான நகைகள்! விஜிலென்ஸ் ரெய்டில் சிக்கிய அரசு பொறியாளர்!