×
 

ராஜ்யசபா எம்.பியாக பதவியேற்றார் நிதிஷ்குமார்!! முதல்வர் பதவியை ராஜினாமா செய்வது எப்போது?!

நிதிஷ் குமார் இன்று ராஜ்யசபா எம்பியாக பதவியேற்றார் – பீஹார் முதல்வர் பதவியில் இருந்து 14ம் தேதி ராஜினாமா செய்கிறார்.

பீஹார் அரசியலில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவரும், மாநில முதல்வருமான நிதிஷ் குமார், இன்று (ஏப்ரல் 10) ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற பீஹார் சட்டசபைத் தேர்தலில், ஜேடியு - பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. அந்தத் தேர்தலில் பாஜக, நிதிஷ் குமாரின் ஜேடியுவை விட அதிக இடங்களைப் பெற்றிருந்தாலும், முதல்வர் பதவியை நிதிஷ் குமாரே ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு, பீஹாரில் விரைவில் பாஜக தலைமையில் ஆட்சி அமையும் என்கிற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்தது.

இதை உறுதிப்படுத்தும் வகையில், சமீபத்தில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் நிதிஷ் குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதுகுறித்து அவர் கூறுகையில், “எம்.எல்.ஏ., எம்.எல்.சி., லோக்சபா எம்பி உள்ளிட்ட பல பதவிகளை வகித்துவிட்டேன். ராஜ்யசபா எம்பியாக இதுவரை பதவி வகித்ததில்லை. அதனால்தான் டெல்லி அரசியலை நோக்கி செல்ல முடிவு செய்துள்ளேன்” என்று விளக்கம் அளித்தார்.

இதையும் படிங்க: முடிவுக்கு வருகிறது 20 ஆண்டு மாநில அரசியல் பயணம்! நிதிஷ்குமார் சகாப்தம் ஓவர்! எம்.பியாக இன்று பதவியேற்பு!

இன்று ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்றதைத் தொடர்ந்து, பீஹார் முதல்வர் பதவியில் இருந்து அவர் விலகுவது உறுதியாகியுள்ளது. வரும் 14ம் தேதி முறைப்படி ராஜினாமா கடிதத்தை அவர் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, முதல்வர் பதவியை உடனடியாக நிரப்புமாறு பாஜக மேலிடத்திடம் நிதிஷ் குமார் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய துணை முதல்வரும், பாஜகவின் மூத்த தலைவருமான சாம்ராட் சவுத்ரியை அடுத்த முதல்வராக்க பாஜக தலைமை விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

ராஜ்யசபா எம்பியாக நிதிஷ் குமார் பதவியேற்றுள்ளதால், அவரது 20 ஆண்டுகளுக்கும் மேலான பீஹார் மாநில அரசியல் பயணம் முடிவுக்கு வருகிறது. பீஹார் அரசியலில் நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த நிதிஷ் குமாரின் விலகல், மாநில அரசியல் சமன்பாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இந்த மாற்றம், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எதிர்காலத்தையும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: முடிவுக்கு வருகிறது 20 ஆண்டு மாநில அரசியல் பயணம்! நிதிஷ்குமார் சகாப்தம் ஓவர்! எம்.பியாக இன்று பதவியேற்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share