இனி தண்டனையில் இருந்து தப்பவே முடியாது!! மறைமுகமாக பாகிஸ்தானை எச்சரிக்கும் ராஜ்நாத் சிங்!
பயங்கரவாதத்தை கையாள்வதில் இரட்டை நிலைப்பாடு (Double Standards) இருக்கக்கூடாது என ராஜ்நாத் சிங் கூறினார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாடு கிர்கிஸ்தானின் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை வலியுறுத்திப் பேசினார்.
ராஜ்நாத் சிங் பேசுகையில், “பயங்கரவாதத்தை கையாள்வதில் இரட்டை நிலைப்பாடு (Double Standards) இருக்கக்கூடாது. பயங்கரவாதத்திற்கு நாடு, மதம் என்ற பாகுபாடு இல்லை. எந்தக் குறையையும் பயங்கரவாதத்துக்கு காரணமாகக் கூற முடியாது” என்று தெளிவாகக் கூறினார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற பஹல்காம் தாக்குதலை சுட்டிக்காட்டிய அவர், “அந்தத் தாக்குதல் மனிதநேயத்தையே உலுக்கியது. பயங்கரவாதத்தின் மையப்புள்ளிகள் இனி தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதற்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ சாட்சியாக உள்ளது. பயங்கரவாதிகள் எங்கு ஒளிந்திருந்தாலும் இந்தியா அவர்களைக் கண்டுபிடித்து துல்லியமாகத் தாக்கி தண்டிக்கும் என்பதை இந்த நடவடிக்கை நிரூபித்துள்ளது” என்றார்.
இதையும் படிங்க: பயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுத்து வளர்க்கும் காங்.,!! அமித் ஷா பகிரங்க குற்றச்சாட்டு!
அரசு ஆதரவுடன் செயல்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை உலக நாடுகள் புறக்கணிக்கக் கூடாது என்றும், இது ஒரு நாட்டின் இறையாண்மையை நேரடியாகத் தாக்குவதாகவும் அவர் எச்சரித்தார்.
மகாத்மா காந்தியின் “கண்ணுக்குக் கண் என்பது உலகத்தையே குருடாக்கிவிடும்” என்ற பொன்மொழியை மேற்கோள் காட்டிய ராஜ்நாத் சிங், “மோதல்களுக்கு தீர்வு காண சண்டையிடுவதை விட பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரமே சிறந்த வழி” என்று வலியுறுத்தினார்.
தற்போதைய உலகம் பிளவுபட்டுள்ள நிலையில், மோதல்களைத் தவிர்த்து, அனைத்து குடிமக்களும் கண்ணியத்துடன் நடத்தப்படும் ஒரு முறையான உலக ஒழுங்கு அவசியம் என்று அவர் கூறினார்.
இந்த மாநாட்டில் இந்தியா, ரஷியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 உறுப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் கலந்துகொண்டனர். ராஜ்நாத் சிங்கின் உரை, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் தீவிரமான அணுகுமுறையை உலக அரங்கில் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் 2017ல் முழு உறுப்பினரான இந்தியா, பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் தனது உறுதியான நிலைப்பாட்டை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிரான எந்த ஒரு செயலுக்கும் பதிலடி உறுதி!! எப்போதும் நீதி நிலைநாட்டப்படும்! இந்திய ராணுவம் எச்சரிக்கை!!