×
 

அடி தூள்...!! - இனி அரசு மருத்துவமனைக்கு போறீங்களா?... இதை கட்டாயம் கொண்டு செல்லக்கூடாது...!

அரசு மருத்துவமனை வரும் நோயாளிகள் இனி உணவு கொண்டு வர வேண்டாம்... அமைச்சர் அருண்ராஜ் அதிரடி அறிவிப்பு

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ், மருத்துவக் காப்பீடு, அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் வருகை உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் வருமான உச்சவரம்பு ரூ.1 லட்சம் என்ற அளவில் வைத்திருக்கிறீர்கள். தற்போது குறைந்தபட்ச சம்பளமே ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. எனவே, இந்த வருமான உச்சவரம்பை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு, நீங்கள் கூறிய அந்த வருமான உச்சவரம்பின் அடிப்படையில்தான் இதுவரை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். ஆனால், அந்த வரம்பை அவ்வளவு கடுமையாகப் பின்பற்றாமல், உண்மையில் யாருக்கு தேவை இருக்கிறதோ அவர்களுக்கு தொடர்ந்து மருத்துவக் காப்பீட்டு உதவியை வழங்கி வருகிறோம்.

எனவே, தற்போது நடைமுறையில் உள்ள அதே வருமான உச்சவரம்புதான் இருக்கும். அதே நேரத்தில், யாருக்கு உண்மையாகத் தேவை இருக்கிறதோ அவர்களுக்கு இல்லை என்று நாங்கள் மறுப்பதில்லை என்றார். 

இதையும் படிங்க: விஜயை சீண்டிய நயினார்..! அம்மா விவகாரத்தில் அமைச்சர் அருண் ராஜ் கொடுத்த பதிலடி!!

பல தனியார் மருத்துவமனைகள் அரசின் இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ஏற்றுக்கொள்வதில்லை. “இந்தத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க வேண்டாம்; நாங்கள் அங்கீகரிக்க முடியாது. அரசு தரப்பில் இருந்து எங்களுக்கு உரிய நிதி வரவில்லை” என்ற குற்றச்சாட்டுகளை தனியார் மருத்துவமனைகள் முன்வைத்து வருகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளாகவே இதுபோன்ற புகார்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன. இதை எந்த அளவுக்கு சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? இதனால் தகுதியான பயனாளிகள் திட்டத்தின் பலனைப் பெற முடியாத சூழல் ஏற்படுகிறதே? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த அவர், இந்தக் குற்றச்சாட்டு முழுவதுமாக இல்லை என்று நான் சொல்ல முடியாது. சில மருத்துவமனைகளில் குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கான பேக்கேஜ் கட்டணம் குறைவாக இருப்பதாகவும், அதை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர். அந்தக் கோரிக்கை தொடர்பாக அவர்களுடன் நாங்கள் தொடர்ந்து பேசி வருகிறோம்.

மேலும், மருத்துவக் காப்பீட்டு அட்டை வைத்திருக்கும் ஒருவர் மருத்துவமனைக்கு வரும்போது, அவருக்கு வழங்க வேண்டிய சிகிச்சையை மறுக்கக்கூடாது என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அந்த நடவடிக்கையும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த காலங்களில் செவிலியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, இது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வழிவகைகளை செய்து வருகிறோம்.

மருத்துவமனைக்கு உணவு எடுத்துக்கொண்டு வருவதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதே? என்ற கேள்விக்கு, மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன. நோயாளியின் உடல்நிலைக்கும், அவருடைய நோயின் தன்மைக்கும் ஏற்ப, மருத்துவமனையிலேயே அனைத்து உள்நோயாளிகளுக்கும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, இந்த உணவையே நோயாளிகள் பயன்படுத்திக்கொள்வது நல்லது. அதே நேரத்தில், வீட்டிலிருந்து உணவு கொண்டு வர வேண்டிய அவசியம் இருந்தால், அவர்களுடைய அட்டெண்டர்கள் தாராளமாக வீட்டிலிருந்து உணவு கொண்டு வரலாம்.

ஆனால், பிளாஸ்டிக் பொருட்கள் மூலம் பேக் செய்யப்பட்ட உணவுப் பொட்டலங்கள் மருத்துவமனைக்குள் கொண்டு வரப்படுவதால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, அந்த பிளாஸ்டிக் கழிவுகள் கழிவுநீர் செல்லும் கால்வாய்களில் அடைப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் கொசுத் தொல்லையும் அதிகரிக்கிறது.

எனவே, பொதுமக்களின் ஒத்துழைப்பை கேட்டுக்கொள்கிறோம். தயவுசெய்து பிளாஸ்டிக் பொருட்களில் பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை மருத்துவமனைக்குள் கொண்டு வர வேண்டாம்.

உதாரணமாக, சூடான சாம்பாரை பிளாஸ்டிக் பையில் கட்டிக்கொண்டு வரும்போது, அதனால் நீண்டகாலத்தில் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இதுபோன்ற நடைமுறைகளைத் தவிர்ப்பது அனைவருக்கும் நல்லது.


இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் கட்டாயமா? அல்லது பொதுமக்களுக்கு வேண்டுகோளாக மட்டும்தானா? என்ற கேள்விக்கு, இரண்டுமே இருக்கும். வேண்டுகோளும் விடுக்கப்படும்; அதே நேரத்தில் தேவையான இடங்களில் கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்படும். வெறும் கட்டுப்பாடுகளை மட்டும் அமல்படுத்த முடியாது. பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

இது மக்களுடைய மருத்துவமனை. அதை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்வது நம் அனைவருடைய பொறுப்பு. எனவே, இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மக்களின் நலனுக்காகவே மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தக் கட்டுப்பாடு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும்தானா? என்ற கேள்விக்கு, 
இல்லை. பார்வையாளர்களுக்கான கட்டுப்பாடுகள் படிப்படியாக அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் கொண்டு செல்லப்படும்.

தற்போது மாவட்ட மற்றும் வட்டார மருத்துவமனைகளுக்குச் செல்லும்போது, அங்குள்ள மருத்துவர்களே, “எங்களால் பார்வையாளர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கட்டுப்படுத்தத் தொடங்கினால் பொதுமக்கள் எங்களுக்கு எதிராகப் புகார் தெரிவிக்கிறார்கள்” என்று கூறுகின்றனர்.

எனவே, முதலில் சென்னையில் இருந்து தொடங்குகிறோம். படிப்படியாக ஒவ்வொரு மருத்துவமனையிலும் பார்வையாளர்களுக்கான நேரத்தை முறையாகக் கட்டுப்படுத்தி, மருத்துவமனையைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருப்பதே எங்களுடைய நோக்கம். வேறு எந்த நோக்கமும் கிடையாது.

அதிகமான மக்கள் ஒரே நேரத்தில் மருத்துவமனையில் கூடும்போது, ஓய்வறைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களும் விரைவாக அசுத்தமாகிவிடுகின்றன. இதுபோன்ற பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன.

 

இதையும் படிங்க: 10 வயதில் எடுத்த சபதம்! 20 வயதில் நடந்த கொலை! ரீல்ஸால் வந்த பகை! தவெக நிர்வாகி கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share