மாணவர் போராட்டம் மற்றும் 'ஜனநாயகன்' திரைப்பட சர்ச்சை! சபாநாயகர் ஜெ.சி.டி. பிராபகர் விளக்கம்!
ஜனநாயகன் திரைப்படம் மாணவர்களை மூளைச்சலவை செய்யும் படம் அல்ல என்றும் போராட்டத்தை திசை திருப்பும் நோக்கம் தவெக அரசுக்கு இல்லை என்றும் சபாநாயகர் ஜெசிடி பிராபகர் தெரிவித்துள்ளார்.
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் நடைபெற்ற ‘தமிழர் 4.0’ வர்த்தக உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட சபாநாயகர் ஜெ.சி.டி. பிராபகர், தவெக தலைவர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் மாணவர்களின் போராட்டத்தை திசைதிருப்பும் நோக்கம் கொண்டதல்ல என்றும், ஊழலற்ற நேர்மையான ஆட்சியை முதலமைச்சர் விஜய் வழங்கி வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார். தமிழ் விவசாய வணிகத் தொழில் மற்றும் சேவைகள் சம்மேளனம் சார்பில் உலகளாவிய வர்த்தகம் மற்றும் வணிக உச்சி மாநாட்டைச் சபாநாயகர் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார்.
மாநாட்டு மேடையில் பேசிய சபாநாயகர் ஜெ.சி.டி. பிராபகர் முதலமைச்சர் விஜய் ஒரு சரியான பாதையில்தான் பயணிக்கிறார். அந்தப் பாதை மிகவும் தெளிவாக இருக்கிறது. 'ஜனநாயகன்' திரைப்படத்தின் முதல் காட்சியையே நான் பார்த்துவிட்டேன். சாதி, மதங்களை யார் எப்படிப் பிரிக்க முயல்கிறார்கள் என்பதைத் தெளிவாகக் காட்டியுள்ள படம் அது.
காமராஜர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டத்தை எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டமாக விரிவாக்கினார். கலைஞர் அதில் முட்டையைச் சேர்த்தார். முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவுத் திட்டத்தை, தற்போது 8-ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்திருக்கிறார் முதலமைச்சர் விஜய் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தூய்மை பணியாளர்களின் முக்கிய கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி! அமைச்சர் வன்னியரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!
நிதிச் சுமை மற்றும் வரும் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்துப் பேசிய அவர் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பதில் முதலமைச்சர் ஆர்வமாக இருக்கிறார். நிதிச் சுமை வந்துவிடும் என நாங்கள் கூறியும் அவர் கேட்கவில்லை. அடுத்த வாரத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. சட்டியில் என்ன இருக்கிறது என்று முதலமைச்சர் பார்த்துவிட்டார். இனி கிள்ளித் தரமாட்டார், நிச்சயமாக அள்ளிக் கொடுப்பார். தொழில்துறையில் பெரிய திட்டங்களை வரும் பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம் என கூறினார்.
நிகழ்ச்சிக்குப் பிறகு, நீட் தேர்வை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி மற்றும் 'ஜனநாயகன்' படம் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது சபாநாயகர் டென்ஷனானார். ஜனநாயகன்' திரைப்படம் எப்போது வெளியாகும் என்பது முன்னரே அறிவிக்கப்பட்டதுதான். இது மாணவர்களின் மூளையைச் சலவை செய்யும் படம் அல்ல. மாணவர்களின் போராட்டத்தைத் திசைதிருப்பும் நோக்கம் எங்களுக்குச் சிறிதும் இல்லை. ஊடகங்களைச் சந்திக்கத் தயங்குவதற்குக் காரணமே, எந்த நிகழ்ச்சிக்கு வருகிறோமோ அதைப் பற்றிக் கேட்காமல் வேறு பிரச்சனைகளைப் பற்றிக் கேட்பதுதான். வருகின்ற நிகழ்ச்சியைப் பற்றிக் கேள்விகள் கேட்டால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறிவிட்டுச் சென்றார்.
இதையும் படிங்க: "விஜய் மாமா"-னு சொன்னீங்களே..? அப்ரண்டிஸ்களாக மாறும் அரசு பள்ளி மாணவர்கள்... நயினார் தாக்கு..!!