முப்படைகளின் தலைமை தளபதியாக தமிழர் நியமனம்... யார் இந்த என்.எஸ்.ராஜா சுப்ரமணி?
ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி, இந்தியாவின் முப்படைகளின் ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பேற்க உள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு அமைப்பில் மிக உயர்ந்த பதவியான முப்படைகளின் பாதுகாப்புப் படைத் தலைவர் (CDS) பொறுப்பை, ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி, இந்தியாவின் முப்படைகளின் ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பேற்க உள்ளார். இது தொடர்பாக மத்திய அரசு முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராகப் பணியாற்றி வரும் லெப்டினன்ட் ஜெனரல் சுப்ரமணி, மே 30 அன்று தற்போதைய முப்படைத் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சௌஹானிடமிருந்து பொறுப்பேற்பார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஜெனரல் சௌஹானின் பதவிக்காலத்தை அரசாங்கம் எட்டு மாதங்களுக்கு நீட்டித்தது.
உயர்மட்டப் பொறுப்புகள்:
ராஜா சுப்ரமணி, முப்படைகளின் தலைமைத் தளபதியாக மட்டுமல்லாமல், இந்திய அரசின் இராணுவ விவகாரங்கள் துறையின் செயலாளராகவும் பணியாற்ற உள்ளார். அவர் பதவியேற்ற நாளிலிருந்து மறு உத்தரவு வரும் வரை இந்தப் பதவியில் தொடர்வார். அவர் முப்படைகளின் தளபதிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே ஒரு முக்கிய இணைப்புப் பாலமாகச் செயல்படுவார். லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணிக்கு பாதுகாப்புத் துறையில் மிகப்பெரிய அனுபவம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழக அரசியலில் திடீர் திருப்பம்... 30 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எடுத்த முக்கிய முடிவு... ஆட்சி அமைப்பாரா விஜய்?
யார் இந்த என்.எஸ்.ராஜா சுப்ரமணி?
லெப்டினன்ட் ஜெனரல் சுப்ரமணி கடந்த ஆண்டு ஜூலை 31 அன்று ராணுவத் துணைத் தலைமைத் தளபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு ராணுவத்தில் 39 ஆண்டுகள் விரிவான அனுபவம் உள்ளது . மார்ச் 2023 முதல் ஜூன் 2024 வரை மத்திய கட்டளைப் பிரிவின் தலைமைத் தளபதியாகப் பணியாற்றியுள்ளார். அதன்பிறகு, ஜூலை 31, 2025 வரை இந்திய ராணுவத்தின் துணைத் தளபதியாகப் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து, அவர் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராக முக்கிய ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாதமி (NDA) மற்றும் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாதமி (IMA) ஆகியவற்றின் முன்னாள் மாணவரான இவர், டிசம்பர் 1985-ல் கார்வால் ரைபிள்ஸ் படையில் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். மேலும் அவர் இதற்கு முன்னர் லக்னோவைத் தளமாகக் கொண்ட மத்திய ராணுவத்தின் தளபதியாகப் பணியாற்றியுள்ளார்.
மேற்கு மற்றும் வடக்கு எல்லைகளில் நிலவும் 'செயல்பாட்டு இயக்கவியல்' குறித்த அவரது பரந்த புரிதல், நாட்டின் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானதாக அமையும்.
அவர் லண்டன் கிங்ஸ் கல்லூரியில் முதுகலை பட்டமும், சென்னை பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஆய்வுகளில் எம்ஃபில் பட்டமும் பெற்றுள்ளார். மேலும், அவர் பிரிட்டனில் உள்ள கூட்டுப் படைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியிலும் பயிற்சி பெற்றார்.
இந்திய ராணுவத்தில் 'படைகளை ஒன்றிணைத்தல்' போன்ற முக்கிய சீர்திருத்தங்கள் தற்போது நடைபெற்று வரும் வேளையில், அவர் முப்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஓரங்கட்ட, ஒதுக்க நினைத்தால் நாங்களே மைய்யம் என்பதை நிரூபிப்போம்..! வன்னியரசு சூசகம்..!