நாம் தமிழர் கட்சியின் மாநாடு... மரங்களை கட்டி அணைத்து முத்தமிட்ட சீமான்..!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மரங்களை கட்டித்தழுவி முத்தமிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற உள்ள மரங்களின் மாநாடு, தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஒரு முக்கியமான நிகழ்வாக அமையவிருக்கிறது. இந்த மாநாடு, கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையின் முயற்சியால், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆகஸ்டு 30 அன்று திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அருங்குளம் கிராமத்தில் நடைபெற உள்ளது. மரங்களோடு பேசுவோம் மரங்களுக்காகப் பேசுவோம் என்ற கருப்பொருளை முன்னிறுத்தி இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
இது, மரங்களின் முக்கியத்துவத்தையும், அவற்றின் உரிமைகளையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அவை ஆற்றும் பங்கையும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாநாடு, கட்சியின் உயிர்மநேய அரசியல் தத்துவத்தின் ஒரு பகுதியாக, பேசும் திறனற்ற உயிர்களான மரங்களைப் பாதுகாப்பதற்காகவும், அவற்றின் உரிமைகளை மீட்டெடுக்கவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம், வளர்ச்சி என்ற பெயரில் மரங்கள் வெட்டப்படுவதையும், இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதையும் எதிர்ப்பது ஆகும். தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக வளர்ந்த மரங்கள் அரசு மற்றும் தனியார் திட்டங்களால் அழிக்கப்படுவதை எதிர்த்து, நாம் தமிழர் கட்சி தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது. உதாரணமாக, வடலூர் வள்ளலார் பெருவெளியில் மரங்கள் வெட்டப்படுவதற்கு எதிராக சீமான் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்திருந்தார். இந்த மாநாடு, இத்தகைய சுற்றுச்சூழல் அழிவுக்கு எதிரான மக்களின் குரலை ஒருங்கிணைத்து, மரங்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும்.
இதையும் படிங்க: விவசாயிகள் வயித்துல அடிக்காதீங்கயா! விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்க சீமான் வலியுறுத்தல்..!
இதற்கு முன்பு ஜூலை 10 அன்று மதுரை விராதனூரில் நடைபெற்ற ஆடு-மாடுகளின் மாநாடு மூலம், மேய்ச்சல் நிலங்களின் உரிமைகளை வலியுறுத்தியது போலவே, இந்த மாநாடும் மரங்களின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவை எதிர்க்கும் ஒரு முக்கியமான முயற்சியாக அமையும். இந்த நிலையில், மாநாட்டுக்கான இடத்தை பார்வையிட சென்ற சீமான் மரங்களை கட்டித்தழுவி முத்தமிட்டார். இது தொடர்பான புகைப்படங்களையும் சீமான் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: எழில்வனத்தை நாசமாக்காதீங்க! அங்க ஆபீஸ் வெக்குறது அறிவில்லாத செயல்.. சீமான் காட்டம்..!