ஆன்லைன் ரம்மி: தமிழகம் விதித்த தடை செல்லும்..!! சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு..!!
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது.
பந்தயம் கட்டி விளையாடப்படும் இணையவழி விளையாட்டுகளுக்கு தடை விதித்த தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகளின் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முக்கிய தீர்ப்பின் மூலம், பந்தயம் மற்றும் சூதாட்டம் தொடர்பான ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தவோ அல்லது முழுமையாகத் தடை செய்யவோ மாநில அரசுகளுக்கு உள்ள அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு, “திறன் சார்ந்த விளையாட்டுகளாக இருந்தாலும், பந்தயம் சேர்ந்தால் அவை பொது நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அரசுகள் அவற்றை ஒழுங்குபடுத்த உரிமை உண்டு” என்று தெளிவாகக் கூறியுள்ளன. மேலும், பந்தயம் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபடுவது அடிப்படை உரிமை அல்ல என்பதையும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது.
இந்த வழக்கு தமிழ்நாட்டில் ஏற்பட்ட சோக சம்பவங்களால் தொடங்கியது. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட பந்தய விளையாட்டுகளில் அடிமையாகி பெரும் தொகையை இழந்து, பலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதனைத் தொடர்ந்து, இளைஞர்கள் உள்ளிட்ட பலரின் வாழ்க்கை பாழாகும் நிலையைத் தடுக்க, தமிழ்நாடு அரசு 2020 நவம்பர் மாதம் அவசரச் சட்டம் ஒன்றை இயற்றியது. இதன் மூலம் ஆன்லைன் ரம்மி, போக்கர் உள்ளிட்ட பந்தய விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம்! தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனாவிற்கு வாய்ப்பு!
எனினும், இந்தச் சட்டத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ரம்மி, போக்கர் போன்றவை திறன் சார்ந்த விளையாட்டுகள் என்பதால், அவற்றுக்கு தடை பொருந்தாது என்று உயர் நீதிமன்றம் கருதியது. அதேபோல் கர்நாடக உயர் நீதிமன்றமும் இதே போன்று தீர்ப்பளித்திருந்தது. இந்த உத்தரவுகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு 2023-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை முடிவில், உச்ச நீதிமன்றம் மாநில அரசுகளின் நிலைப்பாட்டை ஆதரித்துள்ளது.
சென்னை மற்றும் கர்நாடக உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகளை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், மாநிலங்கள் இயற்றிய சட்டங்கள் செல்லும் என்று தெளிவுபடுத்தியது. இந்தத் தீர்ப்பு, நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களுக்கு முக்கிய முன்னுதாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் பொருளாதார இழப்பு, குடும்பப் பிரச்னைகள், மனநல பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு சமூக பிரச்னைகளை கருத்தில் கொண்டு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இனி மாநில அரசுகள் தங்கள் பகுதியில் உள்ள இளைஞர்களை இத்தகைய ஆபத்தான பந்தய விளையாட்டுகளிடமிருந்து பாதுகாக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முடியும். இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று பல்வேறு சமூக அமைப்புகள், பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் வரவேற்றுள்ளனர். அதே நேரத்தில், திறன் சார்ந்த விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் தனி விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: கல்வி, வேலைவாய்ப்பில் 69% இட ஒதுக்கீடு பாதுகாப்பு! சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!