தணியாத போர்ப்பதற்றம்.. ஈரானில் இருந்து டெல்லி வந்த மேலும் 272 இந்தியர்கள்..!
ஈரானின் மஷாத் நகரில் இருந்து டெல்லிக்கு இன்று 272 இந்தியர்கள், 3 நேபாள நாட்டினர் கொண்ட சிறப்பு விமானம் வந்திறங்கியது.
மேற்கு ஆசிய நாடுகளான ஈரானும், இஸ்ரேலும் 40 ஆண்டுகளுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது, இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு மீது பல வான்வழி தாக்குதல்களை நடத்தியது. இஸ்ரேலின் "ஆபரேஷன் ரைசிங் லயன்" என்று பெயரிடப்பட்ட இந்த திட்டம் ஈரானின் அணு ஆயுதத் திறனை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இலக்கு வைத்து நடத்தப்பட்டவை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார்.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது. ஏவுகணை மற்றும் ராக்கெட் குண்டுகளை சுமந்து சென்று, ஈரானின் அணு கூடங்கள், ராணுவ தளங்கள், ராணுவ அதிகாரிகளின் இருப்பிடங்களை தேடி கண்டுபிடித்து இஸ்ரேல் போர் விமானங்கள் தொடர்ச்சியாக குண்டு வீசி வருகின்றன.
இதையும் படிங்க: 3வது உலகப்போர் துவங்கி இருக்கும்.! இந்தியா - பாக்., ஈரான் - இஸ்ரேல் போர் ரகசியங்களை உடைக்கும் ட்ரம்ப்..
பதிலுக்கு தரையில் இருந்து பறந்து சென்று தரைப்பகுதியை தாக்கி அழிக்கும் சக்தி வாய்ந்த க்ரூஸ், பாலிஸ்டிக், ஹைபர் சோனிக் ஏவுகணை ரகங்களை வைத்து இஸ்ரேல் மீது ஈரான் தாக்கி வருகிறது. இதுவரை நடந்த தாக்குதலில் ஈரானில் 300 பேர் கொல்லப்பட்டு இருக்கின்றனர். ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் காயம் அடைந்துள்ளனர். அதே நேரம் இஸ்ரேலுக்கு இவ்வளவு இழப்பு இல்லை. ஈரானோடு ஒப்பிடும் போது இஸ்ரேல் முக்கியமான எந்த கட்டுமானங்களையும் இழக்கவில்லை.
இதுவரை 25க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். 500க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். இத்தனைக்கும் கொத்து கொத்தாக ட்ரோன்கள், 400க்கும் அதிகமான ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் வீசி இருக்கிறது.
போர் காரணமாக பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஈரானில் வசித்து வரும் வெளிநாட்டினர் தங்கள் நாடுகளுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவை சேர்ந்த பலர் ஈரானில் தங்கி கல்வி, மருத்துவம், தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்பட்டு வந்தனர். அவர்கள் பாதுகாப்பு கருதி இந்தியாவுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் 'ஆபரேஷன் சிந்து' மூலம் ஈரானில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் ஏற்கனவே 1000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர். இந்த நடவடிக்கையில் முதல் விமானம் ஈரானில் இருந்து 110 இந்தியர்களுடன் கடந்த 19-ந்தேதி டெல்லி வந்தது. இதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து ஈரானில் இருந்து விமானங்கள் வந்தன. 290 பேர், 311 பேர், 280 பேர் என இந்திய பயணிகள் வந்ததாக மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட எக்ஸ் பதிவு தெரிவிக்கிறது.
இந்நிலையில், ஈரானின் மஷாத் நகரில் இருந்து டெல்லிக்கு இன்று அதிகாலை 12.01 மணியளவில் 272 இந்தியர்கள் மற்றும் 3 நேபாள நாட்டினர் கொண்ட சிறப்பு விமானம் வந்திறங்கியது. இதன்மூலம் இதுவரை 3,426 இந்தியர்கள் ஈரானில் இருந்து சொந்த நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர் என வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இதேபோல் ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து 1,100-க்கும் மேற்பட்டோரை நேற்று முன்தினம் இந்தியா அழைத்து வந்தது. இந்தியாவுக்கு வந்தடைந்ததும் அவர்கள், மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.
இதையும் படிங்க: இஸ்ரேலுக்கு "SPY" வேலை.. 3 பேருக்கு தூக்கு தண்டனை.. அதிரடியில் இறங்கிய ஈரான்..!