அமெரிக்கா, இஸ்ரேலின் வேலைக்காரன் போல் செயல்படும் பாக்.,!! அசீம் முனிருக்கு எதிராக திரளும் ஷியா தலைவர்கள்!!
பாகிஸ்தான் ராணுவ தளபதி முனீர், ''ஈரானை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் ஷியா முஸ்லிம்கள் அந்த நாட்டுக்கு செல்லுங்கள்,'' என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்
மேற்காசியாவில் தீவிரமடைந்துள்ள போர் சூழலில், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஈரானில் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள நிலையில், இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்டை நாடான பாகிஸ்தானில் போராட்டங்கள் வெடித்தன. பாகிஸ்தானில் சன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருந்தாலும், சுமார் 20 சதவீதம் ஷியா முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.
இந்நிலையில், ராவல்பிண்டியில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாகிஸ்தான் ராணுவ தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர், ஷியா மதத் தலைவர்களிடம் பேசும்போது சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை வெளியிட்டார்.
இதையும் படிங்க: இதுதான் திமுகவின் உண்மை முகம்!! பாஜக தாக்கு! வீடியோ ஆதாரத்துடன் கிழித்த அண்ணாமலை
“ஈரானை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் ஷியா முஸ்லிம்கள், அந்த நாட்டுக்கே செல்லுங்கள். வெளிநாட்டு நிகழ்வுகளால் இங்கு வன்முறையை அனுமதிக்க மாட்டோம்” என அவர் கூறியதாக ஷியா தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பேச்சு உடனடியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான் ஷியா மதத் தலைவர்கள், “முனீர் எங்கள் சமூகத்தை அவமதித்துவிட்டார். அவரது ராணுவம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வேலைக்காரன் போல் செயல்படுகிறது” என குற்றம் சாட்டியுள்ளனர்.
அவர்கள், இந்த கருத்து ஷியா சமூகத்தை மட்டுமல்ல, முழு நாட்டின் மத நல்லிணக்கத்தையும் பாதிக்கும் என எச்சரித்துள்ளனர். ராவல்பிண்டி இப்தார் நிகழ்ச்சியில் இருந்து முனீர் அவசரமாக வெளியேறியதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் நடைபெற்ற போராட்டங்களில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. சில இடங்களில் பாதுகாப்புப் படையினருடன் மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இந்த சூழலில் ராணுவ தளபதியின் பேச்சு, ஏற்கனவே பதற்றமான சூழலை மேலும் மோசமாக்கியுள்ளது.
பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவம், வெளிநாட்டு நிகழ்வுகளால் உள்நாட்டில் அமைதி குலையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். ஆனால் ஷியா தலைவர்கள், இந்த கருத்து சமூகத்தை பிளவுபடுத்தும் வகையில் உள்ளது எனக் கூறி, முனீருக்கு எதிராக கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த சர்ச்சை பாகிஸ்தானின் உள்நாட்டு அரசியல் மற்றும் மத உறவுகளில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்காசிய போர் தொடரும் நிலையில், அண்டை நாடுகளில் ஏற்படும் எதிரொலிகள் இன்னும் தீவிரமடையும் என அஞ்சப்படுகிறது. பாகிஸ்தான் மக்கள் அமைதியை காக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: விறுவிறு தேர்தல்... அமமுக போட்டியிடும் 11 தொகுதிகள்... உத்தேச பட்டியல் வெளியீடு..!!