சிந்து நதிநீரை தடுத்தால் கைகளை வெட்டுவோம்!! இந்தியாவுக்கு பாக்., அமைச்சர் பகீரங்க மிரட்டல்!! மீண்டும் பதற்றம்!
சிந்து நதி நீர் ஒப்பந்தப்படி தண்ணீர் தர மறுக்கும் நபர்களின் கைகளை வெட்டுவோம் என்று பாகிஸ்தான் பருவநிலை மாற்ற துறை அமைச்சர் முசாதிக் மாலிக் வாய்ச்சவடால் விடுத்துள்ளார்.
இந்தியா–பாகிஸ்தான் இடையிலான சிந்து நதி நீர் ஒப்பந்த விவகாரம் மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்திய நிலையில், இதுதொடர்பாக பாகிஸ்தான் அமைச்சர்கள் வெளியிட்டுள்ள கருத்துகள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்புகள் காரணம் என இந்தியா குற்றம்சாட்டியது. இதையடுத்து, 1960-ஆம் ஆண்டு உலக வங்கி முன்னிலையில் கையெழுத்தான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா இடைநிறுத்தும் முடிவை அறிவித்தது.
இந்த நடவடிக்கையால் பாகிஸ்தானுக்கு செல்லும் நீர்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், பாகிஸ்தான் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் முசாதிக் மாலிக் பேசியதாக கூறப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: சிந்து நதி நீர் ஒப்பந்தம் காலாவதி ஆகிருச்சி! பாக்., பலன்களை எதிர்பார்க்க கூடாது! இந்தியா திட்டவட்டம்!
அதில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாகிஸ்தானுக்கு கிடைக்க வேண்டிய நீரை தடுக்க முயற்சிப்பவர்களின் கைகளை வெட்டுவோம் என அவர் எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த கருத்து இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், பாகிஸ்தான் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார், சிந்து நதி நீர் ஒப்பந்தம் இன்னும் சட்டரீதியாக அமலில் இருப்பதாக தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக ரத்து செய்யவோ அல்லது திருத்தவோ முடியாது என்றும், பாகிஸ்தானின் நிலைப்பாட்டுக்கு சர்வதேச அளவில் ஆதரவு இருப்பதாகவும் அவர் கூறினார்.
சிந்து நதி மற்றும் அதன் துணை ஆறுகள் பாகிஸ்தானின் முக்கிய குடிநீர் மற்றும் விவசாய நீராதாரமாக உள்ளன. அந்த நாட்டின் பெரும்பாலான மக்கள் இந்த நீர்மூலத்தையே நம்பி வாழ்கின்றனர். இந்தியா ஒப்பந்தத்தை இடைநிறுத்திய பிறகு, நீர் விநியோகம் தொடர்பான விவகாரம் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய அரசியல் மற்றும் தூதரக பிரச்சினையாக மாறியுள்ளது.
பாகிஸ்தான் அமைச்சர்களின் சமீபத்திய கருத்துகள் சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் இந்தியா தரப்பில் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: பாக்., பாணியில் சீனாவுடன் கைகோர்க்கும் வங்கதேசம்!! மூன்று பக்கமும் இந்தியாவை சூழும் ஆபத்து!