கேரளா, கர்நாடகாவை புரட்டிப்போட்ட கனமழை.. ஆட்டம் காட்டும் தென்மேற்கு பருவமழை..
தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தெலங்கானாவிலும் உணரப்பட்டது. இன்று காலை ஐதராபாத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கேரளா, கர்நாடகா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக இரு மாநிலங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேரளாவின் கண்ணுார், காசர்கோடு, கோழிக்கோடு, வயநாடு, ஏர்ணாகுளம், இடுக்கி, திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோட்டையம், திருவனந்தபுரம், காெல்லம், ஆழப்புலா ஆகிய இடங்களில் தொடர்ந்து சில கனமழை பெய்து வருகிறது.
இதனால், மாநிலத்தின் பல பகுதிகளில் முக்கிய நீர் நிலைகள் நிறைந்து வழிகின்றன. இந்நிலையில், கண்ணுார், காசர்கோடு ஆகிய இரு மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கோட்டையம், எர்ணாகுளம், இடுக்கி, திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய எட்டு மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கேரளாவில் தலைதூக்கும் கொரோனா பரவல்.. சுகாதார அமைச்சர் சொல்வது என்ன..?
இன்று முதல் 17ம் தேதி வரை மாநிலம் முழுவதும் கனமழையின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. பல இடங்களில் மாநில அரசின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே வெள்ளம் பாதித்த பதிகுதிகளில் சிக்கியோர், கனமழை தொடரும் என்ற எச்சரிக்கையில் பீதி அடைந்துள்ளனர்.
கர்நாடகாவின் ஹூப்பள்ளி, தார்வாடு ஆகிய இடங்களில் இன்று காலை கனமழை கொட்டியது. இதனால், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தக்ஷிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி, யாத்கிரி, ஹவேரி, விஜயபுரா, கலபுர்கி, கொப்பல், சிவமோகா, மைசூரு, தும்கூரு, பெங்களூரு, பெல்லாரி, ஹாசன் உள்ளிட்ட மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில், அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தீவிரம் அடையும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மணிக்கு, 40 - 50 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கனமழை எச்சரிக்கையால், தார்வாடில் இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழையின் தீவிரத்தை பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் முடிவெடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தெலங்கானாவிலும் உணரப்பட்டது. இன்று காலை ஐதராபாத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது.
இதனால், சாலைகளில் வெள்ளம் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முக்கிய கோயில்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் பக்தர்கள் சிரமம் அடைந்தனர். புதுச்சேரியில் நேற்றிரவு பெய்த திடீர் கனமழையால், சாலைகளில் தண்ணீர் தேங்கியது. சில இடங்களில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், நேற்றிரவு பெய்த கனமழையால் புதுச்சேரி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதையும் படிங்க: தமிழகம், கேரளாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம்.. தேசிய சராசரியை விட இருமடங்கு குறைந்தது..!