நாளை சென்னை வருகிறார் பியூஸ் கோயல்..!! தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டம்..!!
பியூஸ் கோயல் நாளை சென்னை வருகை தரவுள்ள நிலையில், மாலை தொகுதி பங்கீடு தொடர்பாக அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வலுவான போட்டியை எதிர்கொள்ள தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, கூட்டணி தொடர்பான முக்கிய விவகாரங்களை விரிவாக விவாதித்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு இன்று சென்னை திரும்பியுள்ள அவர், கூட்டணி கட்சிகளுக்கு இன்னும் நான்கு நாட்களுக்குள் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிவித்திருந்தார்.
இதனிடையே, பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல் நாளை (மார்ச் 21) பகல் 12 மணியளவில் சென்னை வருகிறார். மாலை 4 மணியளவில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை அதிகாரப்பூர்வமாக தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திரைமறைவு பேச்சுவார்த்தைகளில் பல்வேறு தொகுதிகள் குறித்து ஏற்கனவே ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க: காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை? அப்படி ஒரு சம்பவமே நடக்கல..! காவல்துறை விளக்கம்..!!
அதிமுக சார்பில் பாஜகவுக்கு 29 தொகுதிகள் ஒதுக்க முன்வந்துள்ளது. ஆனால், பாஜக தரப்பில் இந்திய ஜனநாயக கட்சி (ஐஜேகே), புதிய நீதி கட்சி உள்ளிட்ட சில கூட்டணி கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்த கட்சிகளை தாமரை சின்னத்தில் போட்டியிட வைப்பதற்காக கூடுதலாக 8 தொகுதிகள் வரை கேட்டு, மொத்தம் 37 தொகுதிகள் வரை பாஜக பெற முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இருப்பினும், எடப்பாடி பழனிசாமி தரப்பில் இந்த சிறிய கட்சிகளை அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலேயே நிறுத்தலாம் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. இதனால், தொகுதி எண்ணிக்கை மீதான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கூட்டணி உறுதியாக உள்ளது.இதேவேளை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும், பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸும் இன்று டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து தங்கள் கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று காலை கட்சி அலுவலகத்தில் இது தொடர்பான ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்.பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடைபெற்றால், ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி, வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதன்மூலம், அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி, ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் வலுவான அணியாக களமிறங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையும் படிங்க: ரஜினியை மிரட்டிய "திமுக குடும்பம்"... ஆதவ் அர்ஜுனா பகிரங்க குற்றச்சாட்டு..!!