×
 

உலகை உலுக்கிய விமான விபத்து.. டி.என்.ஏ சோதனையால் கண்டறியப்பட்ட 198 உடல்கள் ஒப்படைப்பு..!

குஜராத்தின் ஆமதாபாத் விமான நிலையம் அருகே, 'ஏர் இந்தியா' விமானம் கடந்த 12ம் தேதி விழுந்து நொறுங்கியதில், விமானத்தில் இருந்த ஒருவர் தவிர, 241 பேர் உயிரிழந்தனர்.

குஜராத்தின் ஆமதாபாத் நகரில் ஜூன் 12ல் நடந்த விமான விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 274-ஆக அதிகரித்திருக்கிறது. விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் ஒருவரை தவிர அனைவரும் மரணம் அடைந்தனர். விமானம் வெடித்து சிதறியதால் அருகில் இருந்த பி.ஜெ. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடங்கள் பெரும் சேதம் அடைந்தது. விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட மருத்துவ மாணவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள், சமையல் செய்வோர் என பலரும் பாதிக்கப்பட்டனர்.விடுதியில் 33 பேர் இறந்திருப்பது உறுதி படுத்தப்பட்டு  இருக்கிறது.  

விபத்தின் தீவிரத்தால் பெரும்பாலான உடல்கள் எரிந்தோ அல்லது சிதைந்தோ காணப்பட்டதால், டிஎன்ஏ பரிசோதனை மூலமே அடையாளம் காண முடிந்தது. குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி, காந்திநகரில் உள்ள தடயவியல் ஆய்வகம் (FSL) மற்றும் தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தின் (NFSU) குழுக்கள் இரவு பகலாக பணியாற்றி வருவதாக தெரிவித்தார்.

இந்த பரிசோதனைகளை துரிதப்படுத்த, மாநில அரசு மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர். விபத்தில் ஒரே ஒரு பயணி, பிரிட்டிஷ் குடிமகனான விஷ்வாஸ்குமார் ரமேஷ், அதிசயமாக உயிர் தப்பினார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தற்போது வீடு திரும்பியுள்ளார். மேலும், முன்னாள் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி உட்பட பல முக்கிய நபர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ரூபானியின் இறுதி சடங்கு ராஜ்கோட்டில் மாநில மரியாதையுடன் நடைபெற்றது.

இதையும் படிங்க: கருப்பு பெட்டி உடைந்ததா? ஆமதாபாத் விமான விபத்தில் விலகாத மர்மம்.. அடுத்தடுத்து அதிர்ச்சி!!

தற்போது டி.என்.ஏ., எனப்படும் மரபணு சோதனை வாயிலாக உடல்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில் நேற்று காலை வரை ஆமதாபாத் சிவில் மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனையில், 215 உடல்கள் அடையாளம் காணப்பட்டன. இவற்றில் 198 உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் ராகேஷ் ஜோஷி கூறுகையில், ''ஒப்படைக்கப்பட்ட, 198 உடல்களில் 149 பேர் இந்தியர்கள், 32 பிரிட்டிஷார், ஏழு போர்த்துக்கீசியர்கள், ஒருவர் கனடாவை சேர்ந்தவர். மேலும், விடுதி வளாகத்தில் இறந்த ஒன்பது பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன,'' என்றார்.

இதனிடையே ஏர் இந்தியா விமானம் ஜூன் 12ல் விபத்துக்குள்ளானதுமே இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம், காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், வெளிநாட்டு மருத்துவக் காப்பீடு, தனிநபர் விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு வழங்க இறந்தவர்களின் விபரங்களைச் சரிபார்க்கும்படி கேட்டுக் கொண்டது. விமான விபத்தில் இறந்தவர்களுக்கான காப்பீடை வழங்குவதில் எந்த நடைமுறை சிக்கலோ, தாமதமோ இருக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தியது.

அதன்படி, எல்.ஐ.சி., நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், எச்.டி.எப்.சி லைப், இப்கோ டோக்கியோ ஜெனரல் இன்சூரன்ஸ், பஜாஜ் அலையன்ஸ் ஜி.ஐ.சி., மற்றும் டாடா ஏ.ஐ.ஜி., இன்சூரன்ஸ் போன்ற முக்கிய காப்பீட்டு நிறுவனங்கள், ஆமதாபாத் சிவில் மருத்துவமனையில் உதவி மையங்களை அமைத்துள்ளன.

இதையும் படிங்க: ஆமதாபாத் விமான விபத்து.. இன்று குடும்பத்தாரிடம் உடல்கள் ஒப்படைப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share