இனக் கலவரத்திற்கு பிறகு முதன்முறையாக மணிப்பூருக்கு செல்லும் பிரதமர்! உற்று நோக்கும் மக்கள்
இனக் கலவரம் நடந்த இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் முதல் முறையாக மணிப்பூருக்கு பிரதமர் மோடி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கு முக்கிய காரணம், மாநிலத்தில் நீண்ட காலமாக நடைபெற்று வந்த இன மோதல்கள் மற்றும் அரசியல் நெருக்கடியாகும். 2023 ஆம் ஆண்டு மே 3 முதல் மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி சமூகங்களுக்கு இடையேயான மோதல்கள் கலவரமாக வெடித்தன. இந்த வன்முறைகளில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்ந்தனர்.
மாநில அரசு இந்த வன்முறைகளை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மணிப்பூர் முதலமைச்சராக இருந்த என். பிரேன் சிங், வன்முறைகளை கட்டுப்படுத்தத் தவறியதாக விமர்சிக்கப்பட்டு, 2025 பிப்ரவரி 9-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, அரசியல் நிலைத்தன்மை இல்லாத நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் பிப்ரவரி 13 ஆம் தேதி 2025 அன்று குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது. மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக மணிப்பூரில் குடியேறியவர்களால் மக்கள்தொகை அழுத்தம் மற்றும் நிலப் பயன்பாட்டில் பதற்றம் அதிகரித்தது.
இது மோதல்களை மேலும் தீவிரமாக்கியது. பாஜக ஆளும் மாநிலத்தில், குக்கி சமூகத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் உட்பட பலர், மெய்தி சமூகத்தைச் சேர்ந்த முதலமைச்சர் பிரேன் சிங்கிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்து, புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த உட்கட்சி மோதலும் ஆட்சி நெருக்கடியை உருவாக்கியது.
இதையும் படிங்க: சீனாவில் லேண்ட் ஆன பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.. பாரம்பரிய இசை, நடன நிகழ்ச்சியை கண்டு ரசிப்பு..!!
இந்தக் காரணங்களால், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை மீட்டெடுக்கவும், நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும், மத்திய அரசு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது. 2025 ஜூலை 25 அன்று, இந்த ஆட்சி மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
நாடாளுமன்ற ஒப்புதலுக்குப் பிறகு, குடியரசு தலைவர் ஆட்சி பிப்ரவரி 13, 2026 வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2027 வரை பதவிக்காலம் உள்ள மாநில சட்டமன்றம், அதுவரை செயல்படாமல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. மிகவும் பதற்றமான சூழ்நிலவிய போதிலும் பிரதமர் மோடி மணிப்பூருக்கு இதுவரை செல்லவில்லை. இது பெரும் அரசியல் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த நிலையில் பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மணிப்பூர் கலவரம் நடந்த இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் செப்டம்பர் இரண்டாம் தேதி பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்ல இருப்பதாகவும், அங்குள்ள மக்களை சந்தித்து பேசுவதுடன் பல்வேறு திட்டங்களை அறிவிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உலக அரசியலையே புரட்டிப்போட்ட சம்பவம்... ஜப்பானில் மோடி கால் வைத்த அடுத்த நொடியே ஆட்டம் கண்ட வல்லரசு...!