இந்தியர்களை பாதுகாக்க உறுதி! வளைகுடா நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி அவசர தொலைபேசி ஆலோசனை!
வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் சூழலில் அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய வளைகுடா நாடுகளின் தலைவர்களுடன் அவசர தொலைபேசி ஆலோசனைகளை மேற்கொண்டார்.
மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் - இஸ்ரேல் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு வசிக்கும் சுமார் 90 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யப் பிரதமர் நரேந்திர மோடி அதிரடி ராஜதந்திர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். இன்று வளைகுடா நாடுகளின் முக்கிய தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர், நிலவி வரும் அசாதாரணச் சூழல் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினார்.
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அவர்களைத் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, பிராந்திய அமைதி மற்றும் அங்குள்ள இந்தியப் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்துப் பேசினார். குறிப்பாக, வான்வெளி மூடப்பட்டுள்ள நிலையில் இந்தியர்களைப் பத்திரமாக வெளியேற்றுவதற்கான (Evacuation) ஒத்துழைப்பைச் சவுதி அரசு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து பக்ரைன் மன்னர் ஹமாத் பின் ஈசா அல் கலீபாவுடன் உரையாடிய பிரதமர், போர் பதற்றத்தைத் தணிக்க இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளை விளக்கினார். பக்ரைனில் உள்ள இந்தியர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அந்த நாட்டு அரசு உறுதி செய்யும் என மன்னர் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு! தீபத்தூண் சர்ச்சைக்கு பின் மதுரைக்கு வருகை!
வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியர்களை மீட்க இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல்களை அனுப்பவும், விமானப்படையின் 'சி-17 குளோப்மாஸ்டர்' விமானங்களைத் தயார் நிலையில் வைத்திருக்கவும் மத்திய அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது, போர் காரணமாகக் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், உலகப் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும் ஒருங்கிணைந்து செயல்படத் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.
நேற்று மதுரையில் தமிழகத் திட்டங்களைத் தொடங்கி வைத்த கையோடு, இன்று டெல்லி திரும்பிய பிரதமர் உடனடியாக இந்த அவசர ஆலோசனையை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, ஓமன் அருகே எண்ணெய் கப்பல் தாக்குதலில் இந்திய மாலுமி உயிரிழந்த சம்பவத்திற்குப் பிரதமர் தனது ஆழ்ந்த இரங்கலையும், கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: மதுரையில் பிரதமர் மோடி... ₹4,400 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்! தென் தமிழகத்தில் வளர்ச்சி அலை!