×
 

டெல்லி ஏ.ஐ. உச்சி மாநாடு 2026... பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் இந்தியா - ஏ.ஐ. உச்சி மாநாடு 2026 மற்றும் அதனுடன் இணைந்த இந்தியா ஏ.ஐ. இம்பாக்ட் எக்ஸ்போ ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் அமைந்துள்ள பாரத மண்டபத்தில், இந்தியா ஏஐ இம்பாக்ட் உச்சி மாநாடு 2026 (India AI Impact Summit 2026) நிகழ்வை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். பிப்ரவரி 16 முதல் 20 வரை ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த உச்சி மாநாடு, உலகளாவிய தெற்கு (Global South) நாடொன்றில் நடத்தப்படும் முதல் சர்வதேச ஏஐ மாநாடு என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றுள்ளது. முன்னதாக, பிரிட்டன், தென் கொரியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மட்டுமே இத்தகைய மாநாடுகள் நடைபெற்றுள்ளன. விழாவைத் தொடங்கி வைத்த பிரதமர், அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கண்காட்சியைப் பார்வையிட்டு, இளம் கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனர்களுடன் கலந்துரையாடினார்.

சுமார் 70,000 சதுர மீட்டர் பரப்பளவில் விரிந்துள்ள இந்த ‘இந்தியா ஏஐ இம்பாக்ட் எக்ஸ்போ’வில், 600-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்கள் மற்றும் 300-க்கும் அதிகமான தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது நவீன கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தியுள்ளன. இந்த மாநாடானது மக்கள், பூமி மற்றும் முன்னேற்றம் ஆகிய மூன்று முக்கியக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, சுகாதாரம், விவசாயம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் ஏஐ தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட 13 நாடுகள் தங்களது பிரத்யேக அரங்குகளை அமைத்துச் சர்வதேச ஒத்துழைப்பைப் பறைசாற்றியுள்ளன.

இதையும் படிங்க: பிரதமர் மோடி தலைமையில் இந்தியா AI உச்சிமாநாடு 2026: டெல்லியில் குவியும் உலக தலைவர்கள்!

இந்த உச்சி மாநாட்டில் ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியோ குட்டெரெஸ், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் உள்ளிட்ட 45 நாடுகளின் பிரதிநிதிகளும், கூகுள் மற்றும் ஓபன் ஏஐ போன்ற உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களின் சிஇஓ-க்களும் பங்கேற்க உள்ளனர். இந்தியா ஏஐ மாற்றத்தின் முன்னணியில் நிற்கிறது; நமது லட்சியம் மற்றும் பொறுப்புணர்வின் பிரதிபலிப்பாக இந்த மாநாடு அமையும் என பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 2.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் இந்த நிகழ்வு, இந்தியாவை உலகின் ஏஐ மையமாக (AI Hub) நிலைநிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: முடிவுக்கு வரும் 50 ஆண்டு பாரம்பரிய சவுத் பிளாக்..!! குட்பை சொல்லும் பிரதமர் மோடி..!! நாளை முதல் புதிய அலுவலகத்தில்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share