12வது சர்வதேச யோகா தினம்! பிரதமர் மோடியுடன் கொல்கட்டாவில் 35,000 பேர் யோகாசனம்!
சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, கொல்கட்டாவில் நடந்த பிரதமர் மோடி கலந்து கொண்டு யோகா செய்தார்.
சர்வதேச யோகா தினத்தின் 12வது ஆண்டு கொண்டாட்டம் ஜூன் 21 அன்று உலகம் முழுவதும் உற்சாகத்துடன் நடைபெற்றது. இந்தியாவில் இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி கொல்கட்டாவில் 35,000 பேருடன் இணைந்து யோகாசனம் செய்தார். 'ஆரோக்கியமான முதுமைக்கான யோகா' என்ற கருப்பொருளில் இந்த ஆண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.
இந்தியாவின் முயற்சியால் 2014-ம் ஆண்டு ஐ.நா. சபை யோகாவை அங்கீகரித்தது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த முறை நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட பலர் யோகா செய்து மக்களுக்கு உத்வேகம் அளித்தனர்.
மத்திய ஆயுஷ் அமைச்சகம் தொடங்கிய யோகா சங்கம் வாயிலாக சிறப்பு இணையதளம் உருவாக்கப்பட்டு, பிரதமருடன் இணைந்து யோகா செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவு செய்தன. இதில் 3.22 லட்சம் அரசு அமைப்புகள், 2 லட்சம் கல்வி நிறுவனங்கள், 16,000-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள், 5,000-க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு சமூகக் குழுக்கள் பங்கேற்றன.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு சர்ப்ரைஸ்! ஸ்லோவாக்கியப் பள்ளி மாணவர்கள் அசத்தல்!
மேற்கு வங்க மாநிலம் முதலிடத்தில் 2.76 லட்சம் பதிவுகளுடன் திகழ்ந்தது. ராஜஸ்தான் 1.50 லட்சம் பதிவுகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்தது. மகாராஷ்டிரா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், அஸ்ஸாம், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, ஒடிசா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களும் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றன.
கொல்கட்டா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், “இமயமலை முதல் இந்தியப் பெருங்கடல் வரை, மேற்கு வங்கம் முதல் சவுராஷ்டிரா வரை நாடு முழுவதும் யோகாவின் ஆற்றல் நிறைந்துள்ளது. யோகா மக்களை ஒன்றிணைக்கிறது. முழு நாடும் உலகமும் ஒன்றோடொன்று இணைந்திருப்பதை யோகா உணர்த்துகிறது” என்றார்.
யோகா உடல் நலத்தை மட்டும் வலுப்படுத்தாமல் மன அமைதியையும், உள் சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது. இந்த சர்வதேச யோகா தினம் மக்களிடையே யோகா மீதான ஆர்வத்தை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் தினசரி வாழ்க்கையில் யோகாவை இணைத்துக் கொள்ள இந்த நாள் வாய்ப்பாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: மாணவர்களுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்..!! விளாத்திகுளம் பள்ளியில் அரங்கேறிய அவலம்..!!