×
 

ஜாலி மோடில் பிரதமர் மோடி..!! சிறுவர் - சிறுமிகளுடன் ஃபுட்பால் விளையாடி உற்சாகம்..!!

சிறுவர் சிறுமியருடன் கால்பந்து விளையாடியது புத்துணர்ச்சியை அளித்தது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சிக்கிம் மாநிலம் உருவாக்கப்பட்ட 50-ஆவது ஆண்டு கொண்டாட்ட விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி, தலைநகர் காங்டாக்கில் இன்று (ஏப்ரல் 28, 2026) சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த முக்கிய விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இரு நாள் பயணமாக நேற்று (ஏப்ரல் 27) சிக்கிம் சென்றடைந்தார். காங்டாக் விமான நிலையத்திற்கு வந்த பிரதமரை, சிக்கிம் மாநில ஆளுநர் ஓம் பிரகாஷ் மாத்துர் மற்றும் முதலமைச்சர் பிரேம் சிங் தமாங் ஆகியோர் உற்சாகமாக வரவேற்றனர்.

அப்போது பிரதமர் மோடி, சிக்கிமின் பாரம்பரிய உடையான தொப்பி மற்றும் கோட் அணிந்து, உள்ளூர் மக்களுடன் இணக்கமாகக் காட்சியளித்தார். அவரது வருகையை முன்னிட்டு காங்டாக்கில் பிரமாண்ட சாலைப் பேரணியும் நடைபெற்றது. இன்றைய நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பல்வேறு முக்கிய திட்டங்களைத் தொடங்கி வைக்க உள்ளார்.

சிக்கிமின் பல்வேறு துறைகளில் உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி, சுற்றுலா, விவசாயம் உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் வகையில் ரூ.4,000 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், தொடக்கம் மற்றும் அடிப்படை வசதிகள் உருவாக்கம் ஆகியவை இதில் அடங்கும். இதனைத் தொடர்ந்து, பால்ஜோர் ஸ்டேடியத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்று உரையாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காற்று எரிசக்தி.. உலகளவில் இந்தியா 4ம் இடம்..!! மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்..!!

காலையில் பிரதமர் மோடி ஒரு இதமான நிகழ்வில் ஈடுபட்டார். காங்டாக்கில் உள்ள இளம் சிறுவர்-சிறுமியருடன் கால்பந்து விளையாடினார். இந்த விளையாட்டுப் பயிற்சி தனக்கு புத்துணர்ச்சியை அளித்ததாக பிரதமர் தன் எக்ஸ் (முன்பு ட்விட்டர்) பக்கத்தில் உணர்ச்சிபூர்வமாகப் பதிவிட்டுள்ளார். “இனிமையான காங்டாக் காலையில், சிக்கிமில் உள்ள எனது இளம் நண்பர்களுடன் கால்பந்து விளையாடியதைப் போல் வேறு எதுவும் இல்லை. இந்த இளைஞர்களுடன் இது ஒரு புத்துணர்ச்சியூட்டும் கால்பந்துப் பயிற்சி என்பது தெளிவாகத் தெரிகிறது” என்று அவர் எழுதியுள்ளார்.

பின்னணியில் லோக் பவன் கட்டிடம் தெரியும் வகையில், சிறுவர்-சிறுமியருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்த நிகழ்வு, பிரதமரின் மக்கள் நெருக்கத்தை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியது. விளையாட்டின் மூலம் இளைஞர்களிடையே உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியதாகக் கருதப்படுகிறது. சிக்கிமின் அமைதியான சூழல் மற்றும் முன்னேற்றப் பாதையில் இந்த வருகை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

சிக்கிம் 1975-ஆம் ஆண்டு இந்திய ஒன்றியத்தில் இணைக்கப்பட்டு மாநில அந்தஸ்து பெற்றது. அதன் 50-ஆவது ஆண்டு நிறைவு விழா, மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் பாரம்பரியத்தை ஒருங்கிணைத்து கொண்டாடப்படுகிறது. பிரதமரின் இந்த பயணம், வடகிழக்கு மாநிலங்களின் முன்னேற்றத்துக்கு மத்திய அரசு அளிக்கும் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துகிறது. 

இதையும் படிங்க: டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு முயற்சி: ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை..!! கர்ஜித்த பிரதமர் மோடி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share