×
 

இந்தோனேசியா சிவன் கோயிலில் பிரதமர் மோடி..!! சிறப்பு வழிபாடு..!!

கோவில் புனரமைப்பு மற்றும் பாதுகாப்பு திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவின் அழைப்பின்பேரில் ஜூலை 6 முதல் 8 வரை அந்நாட்டுக்கு இரண்டு நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். ஜகார்த்தாவில் உள்ள வரலாற்றுப் புகழ்மிக்க இஸ்தானா மெர்டேகா அரண்மனையில் இரு தலைவர்களும் நட்புப் பூர்வமான சந்திப்பு நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் பாதுகாப்பு, பொருளாதாரம், தொழில்நுட்பம், கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகளில் 14 ஒப்பந்தங்கள் கையெழுத்தானதோடு, 6 முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.

பிரம்மோஸ் ஏவுகணை தொழில்நுட்ப ஒத்துழைப்பு, கிரிட்டிக்கல் மினரல்ஸ் சப்ளை, ஸ்டீல் சப்ளை சங்கிலி வலுப்படுத்தல், விண்வெளி ஆராய்ச்சி, விவசாயம், சுகாதாரம், பேரிடர் மேலாண்மை மற்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை ஆகிய துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளன. மேலும், இந்தியாவின் தொல்லியல் துறை (Archaeological Survey of India - ASI) இந்தோனேசிய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி பொதுக் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும். இந்த ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான உத்திசார் கூட்டாண்மையை (Comprehensive Strategic Partnership) மேலும் ஆழப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பயணத்தின் இரண்டாவது நாளில் பிரதமர் மோடி ஜாவா தீவில் அமைந்துள்ள யோக்யகர்த்தா நகருக்கு சென்றார். அங்கு 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரம்பனன் (பரம்பானன்) கோவில் வளாகத்துக்கு விஜயம் செய்து சிறப்பு வழிபாடு செய்தார். யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமான இந்த இந்து கோவில் இந்தோனேசியாவின் மிகப் பெரிய சிவன் கோவிலாகக் கருதப்படுகிறது. அதிபர் பிரபோவோவும் பிரதமருடன் இணைந்து கோவிலுக்கு விஜயம் செய்தார்.

இதையும் படிங்க: பிரம்மோஸ் ஏவுகணை ஒப்பந்தம்: இந்தியாவை நாடும் இந்தோனேசியா.. பாதுகாப்பு ஒத்துழைப்பில் புதிய உச்சம்..!!

வழிபாட்டுக்குப் பின்னர், இந்தியாவின் உதவியுடன் பரம்பானன் கோவில் வளாகத்தில் உள்ள சிறிய கோவில்களைப் புனரமைக்கும் மற்றும் பாதுகாக்கும் திட்டத்தை இரு தலைவர்களும் இணைந்து தொடங்கி வைத்தனர். இந்தத் திட்டம் பழங்காலக் கட்டிடக்கலை அம்சங்களைப் பாதுகாப்பதோடு, சுற்றுலா மற்றும் கலாச்சாரப் பரிமாற்றத்தையும் ஊக்குவிக்கும்.

இரு நாடுகளும் 2026-2027ஆம் ஆண்டுகளை ‘தாகூர்-தேவந்தரா ஆண்டு’ எனக் கொண்டாட முடிவு செய்துள்ளன. இது ரவீந்திரநாத் தாகூர் மற்றும் இந்தோனேசியக் கவிஞர் தேவந்தரா ஆகியோரின் பங்களிப்பை நினைவுகூர்வதோடு, கலாச்சாரம் மற்றும் கல்வித் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும்.

இந்தப் பயணம் இந்தியாவின் ‘ஆக்ட் ஈஸ்ட்’ கொள்கை, ‘மஹாசாகர்’ பார்வை மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான, திறந்த, உள்ளடக்கிய உறவுகளை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பயணத்தின் முடிவில் பிரதமர் மோடிக்கு இந்தோனேசியாவின் உயரிய விருதான ‘பிந்தாங் அடிபுர்ணா’ வழங்கப்பட்டது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் இந்திய-இந்தோனேசிய உறவுகளை பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் கலாச்சார அடிப்படையில் புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாட்டு மக்களிடையேயான நட்புறவும் இன்னும் நெருக்கமாகும்.

இதையும் படிங்க: ஜகார்த்தாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.. இந்தோனேசியாவின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share