×
 

எரிபொருள் சிக்கனம்: பள்ளி, கல்லூரிகள் மீண்டும் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாற பிரதமர் மோடி வேண்டுகோள்!

பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் அறிவுறுத்தல்.

மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றத்தால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மீண்டும் ஆன்லைன் வகுப்புகளை (Online Classes) தொடங்குமாறு பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவுறுத்தியுள்ளார்.

மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, தற்போதைய எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேற்காசியாவில் நிலவும் அசாதாரண சூழலால் எரிபொருள் இறக்குமதியில் பெரும் சவால்கள் நிலவுகின்றன. நமது நாட்டின் அன்னியச் செலாவணி மற்றும் பொருளாதார நிலைத்தன்மையைக் காக்க, எரிபொருள் பயன்பாட்டை நாம் சுயக்கட்டுப்பாட்டுடன் குறைக்க வேண்டும்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் தினசரி பயணங்களைக் குறைப்பதன் மூலம் குறிப்பிடத்தக்க அளவு பெட்ரோல் மற்றும் டீசல் தேவையைச் சேமிக்க முடியும். எனவே, சாத்தியமான இடங்களில் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வகுப்புகளை உடனடியாகத் தொடங்க முன்வர வேண்டும். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் நமது கல்வித் துறை ஏற்கனவே ஆன்லைன் முறையைப் பரிச்சயப்படுத்தி இருப்பதால், இந்த மாற்றத்தை மிக எளிதாகச் செயல்படுத்த முடியும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதையும் படிங்க: மேற்காசிய போர் குறித்து மோடி - ட்ரம்ப் ஆலோசனை! ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க இரு நாடுகளும் உறுதி!

பிரதமரின் இந்த அறிவுறுத்தலைத் தொடர்ந்து, மத்தியக் கல்வி அமைச்சகம் மாநில அரசுகளுடன் ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு, ஏற்கனவே டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதால், இந்த ஆன்லைன் வகுப்பு முறை குறித்த முடிவை இன்னும் சில தினங்களில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் சூழலில், உள்நாட்டில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இத்தகைய ‘தேவையைக் குறைக்கும்’ (Demand Reduction) நடவடிக்கைகள் அவசியமாகின்றன. கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்து வேலை’ (Work From Home) வசதியை மீண்டும் வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசு மறைமுகமாகக் கேட்டுக்கொண்டுள்ளது.

போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வரும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நாட்டின் எரிபொருள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: வரலாற்றை படைக்க ஒன்றிணைவோம்! அனைத்து கட்சி தலைவர்களுக்கும் பிரதமர் மோடி கடிதம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share