மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி! ஜூலை 17 முதல் ஆன்லைன் சுய விபரப் பதிவு! 16 மொழிகள் அனுமதி!
16 மொழிகளில், ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து, தங்களின் விபரங்களை சமர்ப்பிக்கலாம்,'' என மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர் சுந்தரேஷ்பாபு தெரிவித்தார்.
சென்னை: நாடு முழுவதும் 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டப் பணியாக, ஜூலை 17 முதல் பொதுமக்கள் தங்கள் சுய விபரங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் முறை தொடங்க உள்ளது. இதுகுறித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு தமிழ்நாடு இயக்குநர் சுந்தரேஷ் பாபு தெரிவித்தார்.
சென்னை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் களப்பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் முதன்மை பணியாளர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. இதைத் தொடங்கி வைத்த சுந்தரேஷ் பாபு பேசுகையில், “மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமாக ஜூலை 17 முதல் 31 வரை பொதுமக்கள் ஆன்லைன் வழியே சுய விபரங்களைப் பதிவு செய்யலாம். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 16 மொழிகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து விபரங்களைச் சமர்ப்பிக்க முடியும்” என்றார்.
அதன்பிறகு ஆகஸ்ட் 1 முதல் 31 வரை வீடுகள் கணக்கெடுப்பு பணி நடைபெறும். இந்தக் கட்டத்தில் 33 கேள்விகள் கேட்கப்படும். முதல் கட்ட ஆன்லைன் பதிவின்போது குடும்பத் தலைவரின் பெயர், தொலைபேசி எண் உள்ளிட்ட அடிப்படை விபரங்களைப் பதிவு செய்ய வேண்டும். ஒருமுறை பதிவு செய்த பிறகு தகவல்களை மாற்ற முடியாது. சேகரிக்கப்படும் அனைத்து தனிநபர் விபரங்களும் முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்...! 40 மணி நேர வேட்டை... 2வது குற்றவாளியை தட்டி தூக்கிய போலீஸ்..!
2011-க்குப் பிறகு 2021-ல் கொரோனா காரணமாக தாமதமான மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ல் நடைபெற உள்ளது. இந்தக் கணக்கெடுப்பு வீட்டு விவரக் கணக்கெடுப்பு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு என இரு கட்டங்களாக நடைபெறும். தமிழ்நாட்டில் இந்தப் பணிகளுக்காக பயிற்சி முகாம்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வரும் 21-ம் தேதி வரை சென்னையில் நடைபெறும் இந்தப் பயிற்சி முகாமில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகள் நாட்டின் எதிர்காலத் திட்டமிடல், கொள்கை வகுப்பு, வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல முக்கிய முடிவுகளுக்கு அடிப்படையாக அமையும். எனவே பொதுமக்கள் ஜூலை 17 முதல் தங்களின் சுய விபரங்களை தவறாமல் பதிவு செய்யுமாறு இயக்குநர் சுந்தரேஷ் பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தையே உலுக்கிய வீடியோ...!! - துணிச்சலாக வெறியாட்டம் ஆடிய கஞ்சா கும்பல்... வீடு புகுந்து செய்தியாளர் மீது சரமாரி தாக்குதல்...!