×
 

"சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை!" - வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் நிவாரணம்!

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தமிழ்நாடு வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தர் மற்றும் குடும்பத்தினரை விடுவித்துச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொவருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாகக் கூறி லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கிலிருந்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முருகேச பூபதி மற்றும் அவரது குடும்பத்தினரை முற்றிலுமாக விடுவித்துச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரான முருகேச பூபதி, கடந்த 2006-ஆம் ஆண்டு ஜூன் 1 முதல் 2009-ஆம் ஆண்டு மே 31 வரை அப்போதைய வேளாண்மைத் துறை அமைச்சரின் சிறப்புத் தனி உதவியாளராகப் பணியாற்றிய காலத்தில், தனது வருமானத்திற்கு அதிகமாக 68.20 லட்சம் ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்ததாகக் கூறி, கடந்த 2018-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் அவரது மனைவி ஜான்சிராணி, மகன் எம். தினேஷ் குமார் மற்றும் மருமகள் கிருத்திகா ஆகியோரும் சேர்க்கப்பட்டிருந்தனர்.

சென்னையில் உள்ள ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி, முருகேச பூபதி மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுவைச் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையும் படிங்க: சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ்! மருதமலை குடமுழுக்கு வழக்கிற்கு சென்னை உயர்நீதிமன்றம் முற்றுப்புள்ளி!

சிறப்பு நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து முருகேச பூபதி குடும்பத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அளித்த விளக்கங்களையும் ஆவணங்களையும் அரசுத் தரப்பு முறையாகப் பரிசீலிக்கத் தவறிவிட்டதாகச் சுட்டிக்காட்டினார். 

மேலும், முருகேச பூபதி மீது வழக்குத் தொடர வழங்கப்பட்ட அனுமதியின் செல்லுபடித் தன்மை மற்றும் சொத்து மதிப்பின் கணக்கீட்டிலும் அடிப்படையிலேயே சட்டரீதியான குறைபாடுகள் உள்ளதை உறுதி செய்த நீதிபதி, சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து முருகேச பூபதி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவரையும் வழக்கிலிருந்து விடுவித்து தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க: "பத்திரிகை, சமூக வலைதள தகவல்களை வைத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது" – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share