திமுக ஆட்சியில் ரூ.100 கோடி மோசடி! பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற லஞ்சம்! சிக்கிய முக்கிய புள்ளி!
திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதி பெற்று தருவதாக கூறி ரூ.100 கோடி மோசடியில் ஈடுபட்ட புகாரில் பி.டி. அரசகுமார் கைது செய்யப்பட்டு உள்ளார்.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் மற்றும் அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றதாக கூறப்படும் வழக்கில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் (பதிவு செய்யப்படாத அமைப்பு) நிறுவனத் தலைவர் பி.டி. அரசகுமாரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நடவடிக்கை கல்வித்துறையிலும், அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல தனியார் பள்ளிகளுக்கு அரசின் அங்கீகாரம் மற்றும் அனுமதி பெற்றுத் தருவதாக உறுதியளித்து, லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் பாதிக்கப்பட்டதாகக் கூறிய பல பள்ளி நிர்வாகங்கள் போலீசில் புகார் அளித்தன. அந்த புகார்களில், இந்த முறைகேடுகள் மற்றும் பணமோசடி சம்பவங்கள் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புகார்களின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக பி.டி. அரசகுமார் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் லஞ்சம்?! ரூ.3 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை! பகீர் குற்றச்சாட்டு!
அவருக்கு உதவியதாகக் கூறப்படும் முத்துக்குமார் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், அரசகுமார் நடத்தி வந்த தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் பொருளாளராக இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் இருவரைத் தவிர மேலும் சிலர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புகாரில் இடம்பெற்றுள்ள தனியார் பள்ளி நிர்வாகிகள், இடைத்தரகர்கள் மற்றும் தொடர்புடைய நபர்களிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இந்த மோசடி வழக்கில் சுமார் ரூ.100 கோடி வரை பணப்பரிவர்த்தனை நடைபெற்றிருக்கலாம் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளதால், பணம் எவ்வாறு வசூலிக்கப்பட்டது, யாருக்கு வழங்கப்பட்டது, இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, கல்வித்துறையில் அங்கீகாரம் தொடர்பான நடைமுறைகள் மீதும் கவனம் திரும்பியுள்ளது. விசாரணை முன்னேறும் நிலையில், இந்த வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: திடீரென வீட்டிற்குள் புகுந்த மர்ம ஆசாமி! பதறிப்போன இளம்பெண்! தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!