பீகார் தேர்தலில் முறைகேடு..? தேர்தல் கமிஷனுடன் மல்லுக்கட்டும் ராகுல்காந்தி!
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு தேர்தல் கமிஷன் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தப்பிப்பது உங்கள் நம்பகத்தன்மையை பாதுகாக்காது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில், பாஜ - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. தோல்வியடைந்த காங்கிரஸ் மாபெரும் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டியது. வாக்காளர் பட்டியலில் உள்ள எண்ணிக்கைக்கும், பதிவான ஓட்டுகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருப்பதாக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.
இதையடுத்து, காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்தது. அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், தேர்தல் நடைமுறை, வாக்காளர் பட்டியல், பதிவான ஓட்டுகள் பற்றி தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், அதே குற்றச்சாட்டை பீகாரில் ராகுல் காந்தி மீண்டும் பதிவு செய்தார்.
மகாராஷ்டிரா தேர்தலில் நடந்தது போலவே, பீகார் தேர்தலிலும் முறைகேட்டை செயல்படுத்த பாஜ திட்டமிட்டுள்ளது. மகாராஷ்டிரா தேர்தலில், முதலில் தேர்தல் அதிகாரிகள் நியமனத்தில் முறைகேடு நடத்தினர். பின் வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்தனர். போலி வாக்காளர்களை பட்டியலில் சேர்த்தனர்.
இதையும் படிங்க: ராகுல்காந்தியா? சசி தரூரா? யார் சொல்வது பொய்.. பற்ற வைத்து ரசிக்கும் மோடி..!
ஓட்டுபதிவிலும் முறைகேடு நடந்தது. பின் அவர்களுக்கு சாதகமான தொகுதிகளில் கூடுதல் ஓட்டுப்பதிவை காண்பித்து பாஜக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது என, ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுக்கு தேர்தல் கமிஷன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா தேர்தலில் முறைகேடு என காங்கிரஸ் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு 2024ம் ஆண்டே உரிய விளக்கம் அளிக்கப்பட்டது.
அது குறித்த விவரங்கள் அனைத்தும் தேர்தல் கமிஷன் வெப்சைட்டில் உள்ளது. அது மிகவும் வெளிப்படை தன்மையானது. தவறான தகவல்களை பரப்புவதின் மூலம் சட்டத்தை அவமதிப்பதோடு, தேர்தல் கமிஷனின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவிக்கப்படுகிறது.
தவறான தகவலை பரப்புபவர்கள் அவர்களின் கட்சி சார்பில் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பூத் ஏஜென்ட்கள், லட்சக்கணக்கான தேர்தல் பணியாளர்களை அவமதிக்கின்றனர்.
தேர்தலில் தங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கவில்லை என்பதற்காக, தேர்தல் கமிஷனின் செயல்பாட்டை களங்கப்படுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது என தேர்தல் கமிஷன் கண்டனத்தை பதிவு செய்தது.
இந்த நிலையில் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தப்பிப்பது உங்கள் நம்பகத்தன்மையை பாதுகாக்காது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது; அன்பான தேர்தல் கமிஷனே, நீங்கள் ஒரு அரசியல் சாசன நிறுவனம். கையெழுத்து போடாத, தப்பிக்கும் நோக்கிலான குறிப்புகளை வெளியிடுவது, தீவிரமான கேள்விகளுக்கு பதிலளிக்கும் முறை அல்ல. உங்களுக்கு மறைக்க எதுவும் இல்லை என்றால், எனது கட்டுரையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மழுப்பாமல் பதிலளித்து நிரூபியுங்கள் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
இதற்காக மராட்டியம் உள்பட அனைத்து மாநிலங்களின் மக்களவை மற்றும் சட்டமன்றம் சமீபத்திய தேர்தல்களுக்கான ஒருங்கிணைந்த, டிஜிட்டல், இயந்திரம் படிக்கக்கூடிய வாக்காளர் பட்டியல் மற்றும் மராட்டிய வாக்குச்சாவடிகளில் தேர்தல் நாளில் மாலை 5 மணிக்குப் பிறகு பதிவான அனைத்து கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் வெளியிடுமாறும் அறிவுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: நொண்டி குதிரைகளை வச்சுக்கிட்டு என்ன பண்ண முடியும்? சொந்த கட்சி நிர்வாகிகளை விமர்சித்த ராகுல்காந்தி..!