மாநிலங்களவை துணை தலைவர் தேர்தல்: ஹரிவன்ஷ் சிங் மீண்டும் போட்டியிட வாய்ப்பு!
மாநிலங்களவை துணை சபாநாயகருக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 17ம் தேதி காலை 11.00 மணிக்கு நடைபெறும் என அறிவிப்பு.
மாநிலங்களவையின் துணைத் தலைவர் (Deputy Chairman) பதவிக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி காலை 11.00 மணிக்கு நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜேடியு (JD-U) கட்சியைச் சேர்ந்த ஹரிவன்ஷ் நாராயண் சிங்கின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், இந்தப் பதவி தற்போது காலியாக உள்ளது.
ஓய்வுபெற்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் இடத்தை நிரப்பும் வகையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஹரிவன்ஷ் சிங்கை மாநிலங்களவையின் நியமன எம்.பி-யாக (Nominated MP) நியமித்துள்ளார். இவர் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி தனது மூன்றாவது பதவிக்காலத்திற்கானப் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) சார்பில் ஹரிவன்ஷ் சிங்கையே மீண்டும் துணைத் தலைவர் பதவிக்கு நிறுத்த வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இவர் ஏற்கனவே இரண்டு முறை இந்தப் பதவியை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கான வேட்புமனுக்களை ஏப்ரல் 16 (நாளை) நண்பகல் 12.00 மணி வரை தாக்கல் செய்யலாம். ஏப்ரல் 17-ஆம் தேதி காலை சபை கூடியவுடன், முக்கிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு 11.00 மணியளவில் தேர்தல் நடைபெறும். துணைத் தலைவர் தேர்தலை அவசரமாக நடத்துவதற்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: அன்பு எங்களுடன்... திருமணம் மோடியுடன்! மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே அடித்த கலகலப்பான ஜோக்!
மக்களவையில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் துணை சபாநாயகர் (Deputy Speaker) பதவி காலியாக இருக்கும்போது, மாநிலங்களவை துணைத் தலைவர் பதவியை மட்டும் 10 நாட்களுக்குள் நிரப்பத் துடிப்பது ஏன் என எதிர்க்கட்சித் தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் டெரெக் ஓ பிரையன் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்று வருவதால், எம்.பி-க்கள் அங்குப் பிஸியாக இருக்கும் வேளையில் தேர்தலை நடத்துவது ஜனநாயகத்தை கேலிக்குள்ளாக்கும் செயல் என அவர்கள் விமர்சித்துள்ளனர்.
மாநிலங்களவையில் தற்போது ஆளும் கூட்டணிக்கு (NDA) சுமார் 140 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதாகக் கருதப்படுகிறது. அதேசமயம் 'இந்தியா' (INDIA) கூட்டணியிடம் சுமார் 70 உறுப்பினர்களே உள்ளனர். பிஜேடி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் நிலைப்பாடு இந்தத் தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கும்.
ஹரிவன்ஷ் சிங் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், மாநிலங்களவை வரலாற்றில் நியமன உறுப்பினர் ஒருவர் துணைத் தலைவர் பதவியை வகிப்பது இதுவே முதல் முறையாக இருக்கும்.
இதையும் படிங்க: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2026: மாநிலங்களவைக்கு இரு நாள் விடுமுறை.. ஈடுசெய்ய வார இறுதி அமர்வு..!!