பூதாகரமானது சபரிமலை தங்கம் விவகாரம்! கேரள சட்டசபையில் கடும் அமளி!! காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போராட்டம்!
தார்மீக அடிப்படையில் பொறுப்பேற்று, தேவசம் போர்டு அமைச்சர் வாசவன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என, காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் அளித்த தங்கத்தைப் பயன்படுத்தி துவாரபாலகர் சிலைகள் மற்றும் கருவறை கதவுகளுக்கு தங்க முலாம் பூசும் பணியில் பெரும் ஊழல் வெளியாகியுள்ளது.
தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் பொட்டி (Unnikrishnan Potty) இந்தப் பணியை மேற்கொண்டார். பணியின் போது கோயிலுக்கு சொந்தமான தங்கம் திருடப்பட்டதாகவும், பூசப்பட்ட தங்கத்தின் எடை குறைந்ததாகவும் புகார்கள் எழுந்தன.
கேரள உயர் நீதிமன்ற உத்தரவுப்படி எஸ்ஐடி (SIT) விசாரணை நடத்தியது. இதில் உன்னிகிருஷ்ணன் உள்ளிட்டோர், திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் அதிகாரிகள், உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவருவும் கைது செய்யப்பட்டார். இது கேரள அரசியலில் பெரும் புயலை கிளப்பியது.
இதையும் படிங்க: தங்க தகடுகளை மறு ஆய்வு செய்க! சபரிமலை தங்கம் திருட்டு!! கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!
காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டின. தேவசம் போர்டு அமைச்சர் வி.என். வாசவன் தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டு வெளியேறினர். சபை வாசலில் அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பினர்.
தந்திரி ராஜீவரு மீது எந்த குற்றமும் இல்லை எனக் கூறி, கொல்லம் விஜிலென்ஸ் கோர்ட் அவருக்கு ஜாமீன் வழங்கியது (பிப்ரவரி 18, 2026). 41 நாட்கள் சிறையில் இருந்த பிறகு விடுதலை ஆனார்.
கோர்ட், எஸ்ஐடி "ஒரு அணு ஆதாரமும் இல்லை" என்று கண்டனம் தெரிவித்தது. இதனால் எதிர்க்கட்சிகள், அரசு வேண்டுமென்றே திசை திருப்புகிறது, தந்திரியை கைது செய்து அமைச்சர்களை காப்பாற்ற முயல்கிறது என்று குற்றம்சாட்டின.
ராஜீவரு 2018-ல் பெண்கள் அனுமதி எதிர்ப்பில் சன்னிதான கதவை மூடியதால் காழ்ப்புணர்ச்சியால் கைது செய்யப்பட்டதாக ஆதரவாளர்கள் கூறினர். சிபிஎம் தலைவர்கள் தந்திரியை "திருடன்" என்று விமர்சித்தனர். எஸ்ஐடி ஜாமீன் உத்தரவை உயர் நீதிமன்றத்தில் சவால் செய்ய திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே ED விசாரணை தீவிரமடைந்துள்ளது. தந்திரி, முன்னாள் தேவசம் போர்டு தலைவர் உள்ளிட்டோரை விசாரிக்க உத்தரவு. இந்த ஊழல் கேரள அரசியலை பெரிதும் பாதித்துள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகள் பெரும் விவாதமாகியுள்ளன. விசாரணை சரியான திசையில் செல்ல வேண்டும் என அனைவரும் வலியுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க: சபரிமலை தங்கம் திருட்டு!! நடிகர் ஜெயராமுக்கு ED நோட்டீஸ்!! இறுகும் அமலாக்கத்துறை பிடி! வெளிவருமா உண்மை?!