சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி? சர்ச்சை விவகாரம்! 9 நீதிபதிகள் அமர்வு விசாரணை!
சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து கடந்த 2018ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிரான, மறுசீராய்வு மனுக்களை 9 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட பழைய பாரம்பரியத்துக்கு எதிராக 2018-ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் வழங்கிய வரலாற்று தீர்ப்பு மீண்டும் விவாதத்துக்கு வந்துள்ளது.
அனைத்து வயது பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற அந்த தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட மறுசீராய்வு மனுக்கள் மற்றும் ரிட் மனுக்களை 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என சுப்ரீம் கோர்ட் இன்று (பிப்ரவரி 16) அறிவித்துள்ளது. இது தமிழகம் உட்பட தென்னிந்தியாவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
2018 செப்டம்பரில் 4:1 என்ற பெரும்பான்மை தீர்ப்பில், நீதிபதிகள் ஆர்.எஃப். நரிமன் தலைமையிலான அமர்வு, சபரிமலை கோவிலில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட வயது வரம்பு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும், பெண்களின் சம உரிமையை மீறுவது என்றும் தீர்ப்பளித்தது.
இதையும் படிங்க: தங்க தகடுகளை மறு ஆய்வு செய்க! சபரிமலை தங்கம் திருட்டு!! கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!
இதனால் அனைத்து வயது பெண்களும் அய்யப்பனை தரிசிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் இத்தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் பெரும் போராட்டங்கள் வெடித்தன. லட்சக்கணக்கான பக்தர்கள் சாலை மறியல், ஹர்த்தால் நடத்தினர். இதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் மறுசீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இன்று தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி, விபுல் பஞ்சோலி ஆகியோர் அமர்வு முன்பு இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன. நீதிபதிகள் இந்த வழக்கு அரசியல் சாசனத்தின் அடிப்படை கேள்விகளை உள்ளடக்கியது என்பதால், 9 நீதிபதிகள் அமர்வால் விசாரிக்கப்பட வேண்டும் என்று தீர்மானித்தனர். தலைமை நீதிபதி இந்த 9 பேர் அமர்வை அமைப்பார் என்றும், விசாரணை ஏப்ரல் 7 அன்று காலை 10:30 மணிக்கு தொடங்கும் என்றும் அறிவித்தனர்.
விசாரணை அட்டவணைப்படி, மறுசீராய்வு மனுக்களுக்கு ஆதரவான வாதங்கள் ஏப்ரல் 7 முதல் 9 வரை நடைபெறும். எதிர்ப்பு தரப்பு வாதங்கள் ஏப்ரல் 14 முதல் 16 வரை நடைபெறும். அனைத்து தரப்பினரும் மார்ச் 14-க்குள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும். அனைத்து வாதங்களும் ஏப்ரல் 22-ஆம் தேதிக்குள் முடிவடையும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 2018 தீர்ப்புக்கு எதிரான ரிட் மனுக்களை மத்திய அரசு ஆதரிப்பதாக தெரிவித்தார். இது பக்தர்களின் நம்பிக்கை மற்றும் மத சுதந்திரத்துடன் தொடர்புடையது என அவர் வாதிட்டார்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருவது சபரிமலை பக்தர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தீர்ப்பு எதுவாக இருந்தாலும், தமிழகம் உட்பட தென்னிந்திய மக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வங்கக்கடலில் உருவாகியது காற்றழுத்த தாழ்வு! கொட்டித்தீர்க்க காத்திருக்கு மழை?!